கோவிட் 19: மாஸ்க், சானிடைசரை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசு
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகம் உபயோகிக்கும் மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகிய பொருட்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் அதிகம் உபயோகிக்கும் மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் நீக்கியுள்ளது. ஜூலை 1 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாஸ்க் அணியவேண்டும், அடிக்கடி கைகளால் சோப்பு போட்டு கழுவ வேண்டும் அல்லது சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. இதனையடுத்து இந்தியர்களின் பட்ஜெட்டில் மாஸ்க், சானிடைசர் முக்கிய இடம் பிடித்துள்ளது. என்னதான் மாஸ்க் போட்டாலும், சோப்பு போட்டு கை கழுவினாலும் லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தொற்று பரவி பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஓராண்டுக்காவது மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க், ஹேண்ட் சானிடைசரை மத்திய அரசு நீக்கியுள்ளது.
24 மணி நேர கொரோனா பரவலில் உலகப் பட்டியலில் 2ஆம் இடத்தில் இந்தியா பகீர் ரிப்போர்ட்!!
மாஸ்க், ஹேண்ட் சானிடைசர்
கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனையடுத்து நாடு முழுவதும் மாஸ்க், சானிடைசர் உபயோகம் அதிகரித்தது. பல இடங்களில் கூடுதல் விலைக்கு விற்றனர். பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகிய பொருட்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்த்தது.
சானிடைசர் விலை நிர்ணயம்
தேவையின் சூழலை காரணம் காட்டி அந்த பொருட்கள் பல இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றின் அத்தியாவசியத்தை ஜூன் வரைக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, உற்பத்தி, தரம், முகமூடிகளின் விநியோகம் மற்றும் சானிடைசர்களை ஒழுங்குபடுத்த சுகாதார மையங்களுக்கும், மாநிலங்களுக்கும் மத்திய அரசு அதிகாரம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கம்
மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் நீக்கியுள்ளது. ஜூலை 1 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பொருட்களுக்கும் தட்டுப்பாடு இருப்பதாகவோ, அதிக விலைக்கு விற்கப்படுவதாகவோ புகார்கள் எதுவும் வரவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வு உதவும்
அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 சட்டத்தின் கீழ் "அத்தியாவசியமானது" என்று பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களின் விலை மற்றும் பங்குகளை கட்டுப்படுத்த கடுமையான விதிகள் உள்ளன. தற்போது அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க் மற்றும் சானிடைசர் நீக்கப்பட்டுள்ளதால் இரண்டு தயாரிப்புகளின் இலவச விலை நிர்ணயம், சேமிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கு இந்த தளர்வு உதவும். தற்போது இந்த இரண்டு பொருட்களின் விலையை உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.