நாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜரான பேஸ்புக் நிர்வாகிகள்.. சரமாரி கேள்விகள்.. ஆஜராக அமேசான் மறுப்பு
டெல்லி: இந்தியாவிலுள்ள பல டிஜிட்டல் பெரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாப்பாக வைத்துள்ளதை உறுதி செய்ய நாடாளுமன்ற குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையடுத்து பேஸ்புக், பேடிஎம், கூகுள், அமேசான் என பல முன்னணி நிறுவன பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த முடிவு செய்தது.
இந்த நிலையில்தான், டேட்டா பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக பேஸ்புக்கின் இந்திய பாலிசி தலைவர், அங்கி தாஸ் மற்றும் இந்தியாவுக்கான அதன் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் ஆகியோர் நாடாளுமன்ற குழு முன்பு இன்று ஆஜரானார்கள்.
புகையை கக்கியபடி.. சீறிப் பாய்ந்த ஏவுகணை.. அரபிக் கடலில் கப்பலை மூழ்கடித்த திக் திக் காட்சி- வீடியோ
சரமாரி கேள்வி
பேஸ்புக் இந்தியா பிரதிநிதிகளிடம், நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் சில சரமாரி கேள்விகளை எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் அதன் விளம்பரதாரர்களின் வணிக பயன்பாடுகளுக்காக அதன் பயனர்களின் டேட்டாவை எடுக்கக்கூடாது என்று நாடாளுமன்ற குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாஜக தலைவர்கள்
சில பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்காக அவர்கள் பேஸ்புக் கணக்கை முடக்கி நடவடிக்கை எடுப்பதை அங்கி தாஸ் தடுத்தார் என்று, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட நிலையில், இன்று விசாரணை நடைபெற்றது. ஆனால், இந்த விசாரணை அந்த செய்தியுடன் தொடர்புடையது அல்ல என்றும், இது டேட்டா பாதுகாப்பு பற்றியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி கலவரம்
இவ்வாண்டு துவக்கத்தில் நடந்த டெல்லி கலவரத்தின்போது சமூக ஊடகங்களை வன்முறையை தூண்ட பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, டெல்லி அரசு குழு முன்னிலையில் அஜித் மோகன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும், அந்தக் குழுவில் ஆஜராக அஜித் மோகன் மறுத்து, டெல்லி அரசு அனுப்பிய சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
அமேசான் மறுப்பு
இந்த நிலையில், டேட்டா பாதுகாப்பு பற்றி, வரும் 28ம் தேதி டுவிட்டரும், 29ம் தேதி கூகுளும், பேடிஎம் நிறுவனமும் அதன் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க நாடாளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் அக்டோபர் 28 ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராக மறுத்துவிட்டது. குழுத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான மீனாட்சி லேகி இதை உறுதி செய்துள்ளார்.
நடவடிக்கை
"நாடாளுமன்ற குழு முன்பாக ஆஜராகதது, அவமதிப்புக்கு ஈடான செயல். எனவே, அமேசான் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு, நாடாளுமன்ற குழு ஒரு மனதாக பரிந்துரை செய்யும்" என்று மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். அமேசான் தரப்பில் இதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கவில்லை.