மனித கழிவுகளில் கொரோனா வைரஸ்.. ஈ வழியாக பிற இடங்களுக்கும் பரவும்.. அமிதாப்பச்சன் கூறியது உண்மையா?
டெல்லி: மனித கழிவுகள் அதாவது மலம் மூலமாக கொரோனா வைரஸ், விரைவாக பரவக்கூடும் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் எச்சரித்துள்ளார். ஆனால், அது உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
அமிதாப் பச்சன் தனது கருத்தை டுவிட்டரில் கூறியிருந்தார். லான்செட் ஆராய்ச்சியை அவர் குறிப்பிட்டு இதை தெரிவித்தார். வீட்டில் ஈக்கள் நுழைவதைத் தடுக்க அனைவரும் தினமும் கழிப்பறைகளைப் பயன்படுத்தவும், கதவை சரியாக பூட்டவும் கேட்டுக்கொண்டார்.
அமிதாப் பச்சன் இதுபற்றி தனது ட்விட்டரில் 2 நிமிட வீடியோவைப் பகிர்ந்தார். வைரஸ் பாதிக்கப்பட்டோரின் மலங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஈக்கள் உணவுத் துகள்களில் அமர்ந்து வைரஸை மேலும் பரப்பக்கூடும் என்று அமிதாப் பச்சன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபர்களின் சுவாச மாதிரிகளுடன் ஒப்பிடும்போது, மல மாதிரிகளில், கொரோனா வைரஸ் நீண்ட காலம் உயிருடன் இருப்பது, அந்த இதழின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபர் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட பிறகும் கூட மல மாதிரிகளில் வைரஸ் உயிரோடு இருக்கக்கூடும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் சமூக தூரத்தின் முக்கியத்துவத்தையும் இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த வீடியோ வெளியிடப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக சுற்றி வந்தது. அந்த செய்தியில், "சீனாவின் புதிய ஆய்வு, வீட்டு ஈக்கள் கொரோனா வைரஸைப் பரப்பக்கூடும் என்பதை நிரூபிக்கிறது. இந்த தகவலை சமீபத்தில் இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முக்கியமான செய்தியை பரப்ப அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டார்." இவ்வாறு அந்த வைரல் மெசேஜ் தெரிவித்தது.
முன்னதாக சுகாதார அமைச்சகத்தின், இணை செயலாளர் லாவ் அகர்வாலிடம், அமிதாப் பச்சன் கூறிய இந்த தகவல் குறித்து விசாரிக்கப்பட்டபோது, இது ஒரு தொற்று நோய் என்று கூறினார். நான் ட்வீட்டைப் பார்க்கவில்லை, ஆனால் தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு தொற்று நோய் என்றும் ஈக்கள் வழியாக பரவாது என்றும் சொல்ல முடியும் என்று அவர் உறுதியாக தெரிவித்தார். கொசுக்கள் மூலமாகவும் கொரோனா தொற்று பரவுவதில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியிருந்தது.