44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி!
டெல்லி: இந்தியாவின் ஆன்மாவாகிய ஜனநாயகத்தை சித்ரவதை செய்து சர்வாதிகாரம் கோரத்தாண்டவம் ஆடிய ஆண்டுகள் 1975-1976. அரசியல் தோல்விக்காக தேசத்தையே பலிகடாவாக்கிய இந்திரா காந்தியால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட நாள் இதே ஜூன் 25.
1971-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து ராஜ்நாராயண் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 1975-ல் ஜூன் 12-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வாசித்தது.
பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்பது முதல் அடி; அடுத்தது 6 ஆண்டுகாலத்துக்கு இந்திரா காந்தி தேர்தலில் போட்டியிடவும் தடை என்கிற சம்மட்டி அடி. இத்தீர்ப்புக்கு தலைவணங்கி இந்திரா காந்தி பதவி விலகியாக வேண்டும் என நாடு முழுவதும் கலகக் குரல்கள் வெடித்தன.
அவசரநிலை பிரகடனம்
ஜெய்பிரகாஷ் நாராயண் தலைமையில் மக்கள் கிளர்ச்சி தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த இந்திரா காந்தி, அவசரநிலையை பிரகடனம் செய்தார். அவ்வளவுதான்... ஒட்டுமொத்த அரச அதிகாரங்களும் தங்களது பயங்கரவாத முகங்களை காட்டத் தொடங்கின.
கொடூர தாக்குதல்கள்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். வெறும் சிறைவாசம் அல்ல... கொடூரத் தாக்குதல்கள்.. வெளியில் தெரியாத சிறை மரணங்கள்.. நினைத்தாலே ஈரக்குலை நடுங்கும்.. தமிழகத்தில் அவசரநிலை காலத்தின் அழியாத சின்னங்களாக இன்றும் பலர் இருக்கின்றனர்.
கடுமையான தணிக்கைகள்
ஊடகங்கள் எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது என்பதை தணிக்கை அதிகாரிகள்தான் தீர்மானித்தனர். எழுத்து சுதந்திரம் கிடையாது; பேச்சு சுதந்திரம் கிடையாது; ஜனநாயகம் மரணித்துக் கிடந்தது 2 ஆண்டுகளாக... அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக, அவசரநிலை சட்டத்தை கடுமையாக எதிர்த்தது.
திமுக ஆட்சி டிஸ்மிஸ்
இந்திரா அரசு வேட்டையாட தேடிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோரை பாதுகாத்தது தமிழ்நாடுதான். அதனாலேயே திமுக ஆட்சியும் கலைக்கப்பட்டது.
சஞ்சய் காந்தியின் அட்டகாசங்கள்
இத்தனை அராஜகத்தையும் அரங்கேற்றிய புண்ணியவான் இந்திரா காந்தியின் அருந்தவப் புதல்வன் சஞ்சய் காந்தி. 1977 லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வி அடைய தேசத்தின் ஆறா துயரமாம் அவசரநிலை பிரகடனமும் முடிவுக்கு வந்தது.