ரூ40,000 கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய பட்னாவிஸ்.. பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை
பெங்களூரு: தமது 80 மணிநேர ஆட்சியில் ரூ40,000 கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பினார் தேவேந்திர பட்னாவிஸ் என பாஜக எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
கர்நாடகாவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அனந்த் குமார் ஹெக்டே,, ரூ40,000 கோடி பணத்தை மத்திய அரசுக்கு 80 மணிநேர ஆட்சியில் பட்னாவிஸ் திருப்பி அனுப்பினார் என கூறியிருந்தார். இது மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்த நிதியை திருப்பி அனுப்புவதற்காகவே பட்னாவிஸ் திடீரென முதல்வராக பதவியேற்றார் என்பது அனந்த்குமார் ஹெக்டேவின் பேச்சு. ஆனால் பட்னாவிஸ் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பட்னாவிஸ், 80 மணிநேர ஆட்சியில் எந்த நிதியையும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை. மத்திய- மாநில அரசுகளின் நிதிப் பரிமாற்ற நடைமுறைகளை அறிந்த எவரும் இதுபோல் கருத்து தெரிவிக்க மாட்டார்கள். இது தொடர்பாக மாநில நிதித்துறை விசாரணை நடத்தலாம்.
இத்தகைய கருத்துகளும் அதற்கான விமர்சனங்களும் தவறானது என்றார். என்சிபியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், அனந்த் ஹெக்டே கூறுவது சாத்தியமா என தெரியவில்லை. அப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் பாஜகவின் உண்மை முகத்தை அது அம்பலப்படுத்திவிடும் என்றார்.
ஏற்கனவே பிரக்யாசிங் தாக்கூரின் கோட்சே தேசபக்தர் என்ற கருத்தை ஆதரித்து ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கியவர்தான் ஆனந்த் ஹெக்டே என்பதும் குறிப்பிடத்தக்கது.