வாட்.. மக்கள் நடமாட்டத்தை தடுக்க .. புடின் சிங்கத்தை ரோட்டில் உலாவ விட்டாரா.. பூராம் புருடா!
ரஷ்ய தெருக்களில் சிங்கத்தை நடமாட விட்டதாக வதந்தி பரவுகிறது
டெல்லி: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்களை சாலைகளில் தெருக்களில் திரிவதைத் தடுக்க, சிங்கங்களை திறந்து விட்டுள்ளார் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின். அப்படி ஒரு சிங்கம் ரோட்டில் நடமாடும் காட்சிதான் இது... இப்படி ஒரு செய்தி வாட்ஸ் ஆப்பில் வலம் வருகிறது. ஆனால் நிஜம் வேறு!!
கொரோனாவைரஸ் பரவலை வைத்து ஏகப்பட்ட செய்திகள், அதில் 90 சதவீதம் வதந்திகள்தான். அப்பாவி மக்களை பெருமளவில் குழப்பிக் கொண்டிருப்பது இந்த மாதிரியான வதந்தி வாந்திகள்தான். என்ன கணக்கில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை.
கொரோனாவைரஸை வைத்து கிளம்பி வரும் வதந்திகளை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு அதை ஒதுக்க வேண்டும். அப்படிப்பட்ட வதந்திகளில் ஒன்றைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
வாட்ஸ்அப்
வாட்ஸ் ஆப்பில் ஒரு படத்துடன் கூடிய செய்தி ஒன்று உலா வருகிறது. அதாவது நடு ரோட்டில் ஒரு சிங்கம் நிற்கிறது. அந்த இடத்தில் மனித நடமாட்டமே இல்லை. அந்த புகைப்படத்தில் இது ரஷ்யாவில் தற்போது எடுக்கப்பட்ட படம். அதாவது மக்கள் கொரோனா வைரஸ் காரணமாக வெளியில் வராதீர்கள் என்று சொன்னால் கேட்பதில்லை. இதனால் ரஷ்ய அதிபர் விலாடிமிர் எடுத்த அதிரடி நடவடிக்கைதான் இது.
800 சிங்கங்கள்
அதன்படி மக்களை அச்சுறுத்தி வீட்டுக்குள்ளேயே தங்க வைப்பதற்காக புடின் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுதான் இது. அதாவது மொத்தம் 800 சிங்கங்களை இதுபோல தெருக்களில் நடமாட விட்டுள்ளார் புடின். அப்போதுதான் மக்கள் பயந்து கொண்டு வெளியே வர மாட்டார்கள் என்பது அவரது திட்டம். அதன்படியே இப்போது மக்கள் நடமாட்டம் அடியோடு குறைந்து விட்டது.
ஃபேக் நியூஸ்
சிங்கம் மட்டுமல்லாமல் புலியையும் கூட அவர் தெருக்களில் திறந்து விட்டுள்ளார் என்று போகிறது இந்த செய்தி. உலகின் நம்பர் ஒன் ஃபேக் நியூஸ் என்று இதைத்தான் சொல்ல வேண்டும். காரணம், கைப்பிடி "புளி" அளவு கூட இந்த படத்திலும், செய்தியிலும் உண்மை இல்லை. உண்மையில் இந்த படத்தில் இருக்கும் காட்சி 2016ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டதாகும். அதைக் கொண்டு போய் ரஷ்யாவுடன் சேர்த்து கதை திரித்துள்ளனர்.
உத்தரவு
அதேபோல மக்கள் உள்ளே இருக்காமல் வெளியில் திரிந்தால் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என புடின் உத்தரவிட்டுள்ளதாகவும் இன்னொரு செய்தி வந்தது. அதுவும் கூட வதந்திதான், பொய்யானது. இப்படி உலகம் முழுவதும் ஏகப்பட்ட வதந்திகளை, பொய்களை மக்களில் சிலர் பரவ விட்டு வருகின்றனர். இவர்களை மன வியாதியஸ்தர்களாகத்தான் பார்க்க வேண்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் செய்திகளை மட்டுமே வெளியே சொல்வோம். அதுதான் எல்லோருக்கும் நல்லது.