கொரோனா வைரஸ் தடுப்பு சர்வதேச நடவடிக்கைக்கு மோடியை தலைமை ஏற்க 18 நாடுகள் வலியுறுத்தினவா?
டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடியை தலைமை ஏற்க வேண்டும் என்று 18 நாடுகள் வலியுறுத்தியதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் அண்மையில் ஒரு செய்தி அதிவேகமாக ஷேர் செய்யப்பட்டது. அதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 18 நாடுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடியை தலைமை ஏற்க வலியுறுத்தியதாக கூறப்பட்டிருந்தது. மேலும் இந்தியர்களுக்கு இது பெருமைமிக்க தருணம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
நமது நாட்டைப் பொறுத்தவரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார் என்பது உண்மைதான். ஆனால் சர்வதேச நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடியை தலைமை ஏற்க வேண்டும் என்கிற வேண்டுகோள் வந்துள்ளது என்பது உண்மை அல்ல. பிரதமர் மோடியின் narendramodi.in என்ற இணையளத்திலும் பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் ஜி20 நாடுகளின் தலைவர்களுடனான ஆலோசனைகள் குறித்தும் அந்த இணையதளத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. நாடுகளிடையே ஆராய்ச்சிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்வது குறித்தும் ஜி20 நாடுகள் தலைவர்களுடனான ஆலோசனையில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதில்தான், பிரதமர் மோடி சர்வதேச நாடுகளின் தலைவர்களுடனும் தொலைபேசியில் பேசியதாக எழுதப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 309ஆக உயர்வு
ஆனால் எந்த ஒன்றிலுமே பிரதமர் மோடியை தலைமை ஏற்க வேண்டும் என்கிற செய்தி குறிப்பிடவில்லை. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நெட்டிசன்கள்தான் இதுபோன்ற ஒரு தவறான பொய்ச் செய்தியை பரப்பி வருகின்றனர்.