பொய் வேகமாக பரவும்.. பாஜகவில் இருந்து விலகுகிறாரா ஜோதிராதித்ய சிந்தியா.. டிவிட்டரில் அதிரடி விளக்கம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பாஜகவில் இருந்தும் வெளியேறுவதாக செய்திகள் வெளியானது. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து பாஜக கட்சி என்பதை நீக்கியதை அடுத்து பாஜகவில் இருந்து வெளியேறுகிறார் என்று செய்திகள் வந்தது. ஆனால் சிந்தியா இந்த செய்திகளை மறுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் 18 வருடமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேசத்தில் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்று கோபத்தில் இருந்தார். இதையடுத்து 22 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி அங்கு ஆட்சியை கலைத்தார்.
இதனால் மத்திய பிரதேசத்தில் ஒரே வருடத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த மார்ச் 11ம் தேதிதான் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்.
திடீரென செருப்பை கழட்டி.. அரசு அதிகாரியை வெளுத்த பாஜக ஸ்டார்.. யார்னு தெரியுதா பாருங்க.. ஷாக் வீடியோ
என்ன சர்ச்சை
இந்த நிலையில் பாஜகவில் ஜோதிராதித்ய சிந்தியா சரியாக நடத்தப்படவில்லை என்று புகார் உள்ளது. அவருக்கு கட்சியில் பெரிய அளவில் மதிப்பு இல்லை.அவருக்கு பெரிய பெரிய பதவிகள் கொடுப்பதாக கூறி ஏமாற்றிவிட்டனர் என்று புகார்கள் வந்தது. இதனால் ஜோதிராதித்ய சிந்தியாவின் தொண்டர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.
ஆட்சி மீது கோபம்
அதோடு மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் சரியாக ஆட்சி செய்யவில்லை. அமைச்சரவையை கூட அங்கு முழுதாக தேர்வு செய்யவில்லை என்று அவர் மீது புகார் உள்ளது. இதனால் கோபம் அடைந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளார் என்று கூறுகிறார்கள். இதனால் அவர் பாஜகவில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.
டிவிட்டர் நீக்கம்
இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா தற்போது தனது டிவிட்டர் பக்கத்தின் பயோவில் இருந்து பாஜக கட்சி என்பதை நீக்கி இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழ இவர்தான் காரணமாக இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தனது பக்கத்தில் இருந்து காங்கிரஸ் என்பதை நீக்கினார். தற்போது அதேபோல் பாஜக என்பதை நீக்கி இருக்கிறார்.
என்ன சிக்கல்
இதனால் அவர் பாஜகவில் இருந்தும் விலக போகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அவர் டிவிட்டர் பக்கத்தில் பாஜக என்று போடவே இல்லை. அவருக்கும் பாஜகவிற்கும் எந்த மனஸ்தாபமும் இல்லை. அவர் எப்போதுமே டிவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் ஆர்வலர், மக்கள் சேவகர் என்று மட்டும்தான் வைத்து இருந்தார், பாஜக என்று போடவும் இல்லை நீக்கவும் இல்லை என்று பாஜகவினர் தெரிவித்தனர்.
விளக்கம் அளித்தார்
தற்போது இதற்கு சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். அதில், தற்போது பொய்யான செய்திகள் உண்மையை விட மிக வேகமாக பரவி வருகிறது என்று சிந்தியா கூறி உள்ளார். இதன் மூலம் அவர் பாஜகவில் இருந்து வெளியேறுவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.