ஃபானி புயல்.. எங்கெல்லாம் அதிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்!
டெல்லி: ஃபானி புயலால் ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அதிகனமழை கொட்டித் தீர்க்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரிக்கு தென்கிழக்கு திசையில் 450 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபானி புயல் கரையை கடக்கும் போது 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ஃபனியால் வந்த வினை.. சுட்டெரிக்கும் வெயிலில் தகிக்கும் தமிழகம்.. இங்கெல்லாம் செம அனல்.. வெதர்மேன்
விடுமுறை அறிவிப்பு
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறையினர், மீட்புப்படையினர் குவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா மாநிலம் முழுவதும் இன்று முதல் வரும் நான்காம் தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேற்ற முடிவு
மூடப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகளில் 879 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் புயல் சின்னம் பூரி நகருக்கு அருகில் வரும் என்பதால் கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
450 கிமீ தொலைவில் ஃபானி
அதன்படி கடலோர பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் 8 லட்சம் பேரை இன்று மாலைக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரிக்கு தென்கிழக்கு திசையில் 450 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை கடக்கிறது
இந்த புயல் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நெருங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகலில் ஃபானி புயல் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை
புயல் காரணமாக வடக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் அதி கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வட கடலோர ஆந்திராவில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கிலும் மழை
அசாம், மேகாலயா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்று 50 கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை 170 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை ஒரு சில இடங்களில் 200 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதி, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.