துர்நாற்றம் வீசும் கழிவறைகள்.. தரமில்லாத உணவு.. அரசு முகாம்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவதி
டெல்லி: டெல்லியில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் முகாம்களில் போலீஸார் நடத்திய ஆய்வில் கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் மின்விசிறிகள் ஓடவில்லை என்றும் அங்கு வசிக்க முடியாத சூழல் இருப்பதால் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதையே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விரும்புவதாக தங்கள் அறிக்கையில் போலீஸார் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டவுடன் வேலையில்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து தங்கள் சொந்த இடங்களுக்கு சாரை சாரையாக நடந்தே சென்றனர். இவர்களில் ஒருவருக்கு கொரோனா பரவியிருந்தாலும் ஆபத்து என்பதால் அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். இங்கிருந்து ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.
பள்ளிகள், மால்கள், பொது போக்குவரத்து மே 3-க்கு பிறகும் முடக்கம்?.. ஊரடங்கு நீட்டிப்பா?
உணவின் தரம்
இதையடுத்து டெல்லியில் உள்ள 223 நிரந்தர தங்குமிடங்கள், பள்ளி கட்டடங்கள் என அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் வசிக்கும் முகாம்களில் 2 இடங்களில் போலீஸார் ஆய்வு நடத்தினர். அதன் ஆய்வறிக்கையை உயரதிகாரிகளுக்கு சமர்ப்பித்தனர். அதில் அங்கு மின் விசிறிகள் இயங்கவில்லை. கழிவறைகள் சுத்தமானதாக இல்லை. அது போல் உணவின் தரமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
தொழிலாளர்கள்
கைகளை கழுவ சோப்பு இல்லை. கிருமிநாசினி இல்லை. கழிவறைகளில் துர்நாற்றம் வீசி வருகிறது. காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கழிவறைகளில் தண்ணீர் வருகிறது. துணிகளை துவைத்துக் கொள்ள சோப்புகள் வழங்கப்படவில்லை. கொசுக் கடியால் அவதிப்படுவதால் தங்கள் சொந்த ஊர்களுக்கே செல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.
கேள்விக்குறி
உணவும் ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் உணவு தரமில்லாததால் நல்ல உணவை தேடி தொழிலாளர்கள் வெளியே சுற்றி வருகிறார்கள். சமூக இடைவெளி என்பது இந்த இடத்தில் கேள்விக்குறியாகவே உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
இந்த அறிக்கை துணை காவல் துறை ஆணையரால் அரசுக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.