ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துமா? பக்க விளைவுகள் வருமா? இதை படியுங்க
டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னி -V தடுப்பூசியை நமது நாட்டில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது இந்தியாவில் பயன்படுத்தப்பட இருக்கும் 3-வது கொரோனா தடுப்பூசி.
இந்தியாவில் ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியூட்- பாரத் பயோடெக் இணைந்து தயாரித்த கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம்- அஸ்ட்ராஜெனகா கூட்டு தயாரிப்பில் உருவான கோவிஷீல்டு ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் - V தடுப்பூசியானது இம்மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வரும்.
ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசி யாரால் உருவாக்கப்பட்டது?
ரஷ்யா சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காமலேயா நோய்த் தொற்றியல், நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இதில் V என்பது 5- என்கிற எண்ணைக் குறிப்பது அல்ல. ஆங்கில எழுத்து V என்பதாகும். இந்த தடுப்பூசியானது மனிதர்கள் உடலில் சாதாரன பொதுவாக சளியை ஏற்படுத்தும் 2 வகையான வைரஸ்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.
ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசி எந்த வெப்ப நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்?
ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசியானது 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். அதாவது சாதாரணமாக பயன்பாட்டில் இருக்கக் கூடிய குளிர்சாதன பெட்டிகளிலேயே இதனை பாதுகாக்கலாம். இதற்காக தனியே முதலீடு செய்து கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவை இல்லை.
எத்தனை முறை ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்?
கோவாக்சின், கோவிஷீல்டு போலவே இரு முறை இந்த தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டும். முதல் முறையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் 21 நாட்கள் கழித்து 2-வது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த தடுப்பூசி எத்தகைய வலிமையைக் கொண்டது?
ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசியானது 91.5% கொரோனாவை தடுக்கும் வலிமையைக் கொண்டது. மோடர்னா மற்றும் பைசர்- பயோடெக் தடுப்பூசிகளுக்கு அடுத்ததாக வலிமை வாய்ந்தது. இந்தியாவில் பரிசோதனைகளுக்குப் பின்னர் இதனை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டால் பக்க விளைவுகள் வருமா?
ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்க விளைவுகள் 0.1% மட்டுமே ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ரஷ்யாவின் சுகாதாரத் துறை அமைச்சர் மிகையில் முரஷ்கோ தெரிவித்ததாக ஏப்ரல் 6-ந் தேதியன்று அந்த நாட்டின் அரசு ஊடகமாக TASS செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் ஸ்புட்னிக் V தடுப்பூசி உருவாக்கப்பட்டதில் வெளிப்படை தன்மைகள் இல்லை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்து பேராசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.
ஸ்புட்னிக்-V தடுப்பூசி விலை என்ன?
தற்போதைய நிலையில் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசி விலை தெளிவாக சொல்லப்படவில்லை. சர்வதேச சந்தையில் 10 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ750.
இந்தியாவில் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசியை தயாரிப்பது யார்?
ரஷ்யாவின் RDIF மூலமாக டாக்டர் ரெட்டி நிறுவனம் முதலில் இந்த தடுப்பூசியை உருவாக்கியது. இந்தியாவில் 250 மில்லியன் தடுப்பூசிகளை டாக்டர் ரெட்டி நிறுவனம் வழங்கும் என்பது எதிர்பார்ப்பு.
அத்துடன் கிளாண்ட் பார்மா, ஹெடிரோ பயோபார்மா, ஸ்டெலிஸ் பயோ பார்மா, விர்சோ பயோட்க், பனெக்கா பயோடெக் நிறுவனங்களும் சுமார் 850 மில்லியன் தடுப்பூசிகளை ரஷ்யாவின் RDIF மூலம் இணைந்து தயாரிக்க உள்ளது.