வேளாண் சட்டம்... நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று போராட்டம்...டெல்லியில் ஆம் ஆத்மி மனித சங்கிலி!!
டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் வேளாண் மசோதாவை எதிர்த்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஏகே அந்தோணி நேற்று அறிவித்து இருந்தார். அதன்படி இன்று போராட்டம் நடத்தவும், இந்த மசோதா சட்டமாவதை எதிர்த்து 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்குவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதேபோல் டெல்லி, பஞ்சாபில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதற்கு கட்சியினருக்கு ஆம் ஆத்மி கட்சியும் அழைப்பு விடுத்துள்ளது. இதை முன்னிட்டு டெல்லியை ஒட்டிய எல்லை மாநிலங்களில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்பு இந்தப் போராட்டம் நாளை ( செப்டம்பர் 25ஆம் தேதி) நடக்கும் என்று காங்கிரஸ் அறிவித்து இருந்தது. ஆனால், திடீரென இன்று நடக்கும் என்று நேற்று ஏகே அந்தோணி அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் மட்டத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்ய சபாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை விவசாயிகள் விலை ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வணிக மற்றும் வர்த்தக மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது, அவையில் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்றும், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துணைத்தலைவரின் இருக்கைக்கு சென்று விதிகள் அடங்கிய பேப்பரை கிழித்து எறிந்தனர். மசோதா நகல்களையும் கிழித்தனர். இதனால், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு பேர் கூட்டத் தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்குகொள்ளக் கூடாது என்று சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர். இதை எதிர்த்து கடந்த மூன்று நாட்களாக அவை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறப்பினர்கள் வேளாண் மசோதாக்களை கண்டித்து பேரணி சென்றனர். இந்த மசோதாக்கள் லோக் சபாவில் ஏற்கனவே நிறைவேறியுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தத்தின் கையெழுத்துக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. அதிமுக இந்த வேளாண் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் போராட்டம் நடத்துவதற்கு பஞ்சாப் மற்றும் டெல்லியில் அழைப்பு விடுத்துள்ளது. மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இதை முன்னிட்டு டெல்லியை ஒட்டி இருக்கும் மாநில எல்லைகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் ஏற்கனவே 144 தடையுத்தரவு அமலில் இருக்கிறது.
ஏற்கனவே விவசாயிகள் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சமூக, பண்பாட்டு மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு டெல்லியில் வரும் 30ஆம் தேதி வரை 144 தடை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.