விவசாய மசோதா...ஷிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு... பாஜகவுடன் உறவை முறிக்க தயார் என அறிவிப்பு!
டெல்லி: விவசாயிகளுக்கு எதிரான மூன்று மசோதாக்களைஏற்றுக் கொள்ள மாட்டோம். எதிர்த்து வாக்களிப்போம் என்று ஷிரோமணி அகாலிதளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போர்க் கொடி உயர்த்தியுள்ளன. இன்று ராஜ்ய சபாவில் இந்த மசோதா வாக்கெடுப்புக்கு வருகிறது.
இதுதொடர்பாக ராஜ்ய சபாவில் இருக்கும் அகாலிதளம் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று இந்தக் கட்சியின் கொறடா நரேஷ் குஜ்ரால் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
விவசாயிகள் அதிகாரம்
இன்று ராஜ்ய சபாவில் அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகியவை இன்று வாக்கெடுப்புக்கு வருகின்றன. இந்த மூன்று மசோதாக்களை கடுமையாக நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர்.
காங்கிரஸ்
இந்த நிலையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாக்களை எதிர்த்து வாக்களிப்போம் என்று கூறியுள்ளன. முக்கியமாக அகாலிதளம் கட்சி கடுமையான வாதத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.
சுக்பீர் சிங் பாதல்
இந்த மசோதா கடந்த செவ்வாய் கிழமை லோக் சபாவில் வாக்கெடுப்புக்கு வந்தபோதும், ஷிரோமணி அகாலிதளம் ஏதிர்த்து வாக்களித்து இருந்தது. இந்த மசோதாவை எதிர்த்து இந்தக் கட்சியின் தலைவரும், ஃபெரோஸ்பூர் எம்பியுமான சுக்பீர் சிங் பாதல் எதிர்த்து வாக்களித்து இருந்தார். இந்தக் கட்சிக்கு ராஜ்ய சபாவில் நரேஷ் குஜ்ரால், பல்விந்தர் சிங் புந்தர், சுக்தேவ் சிங் தின்ட்சா ஆகியோர் உறுப்பினர்களாகஇருக்கின்றனர்.
சுக்தேவ் சிங்
இவர்களில் சுக்தேவ் சிங் தின்ட்சா கடந்த ஜூலை மாதம்அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி தனிக் கட்சி துவங்கி இருக்கிறார். கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இவரும் இவரது மகன் பர்மிந்தர் சிங் தின்ட்சாவும் கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியேற்றப்பட்டு இருந்தனர்.
எதிர்ப்பு
ஆம் ஆத்மி கட்சி நிறுவனரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் ஜெக்ரிவால் இந்த மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ''இந்த மூன்று விவசாய மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானவை. நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகள் இந்த மூன்று மசோதாக்களையும் எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசு இந்த மூன்று மசோதாக்களையும் வாபஸ் பெற வேண்டும். ராஜ்ய சபாவில் இந்த மசோதாக்களை எதிர்த்து ஆம் ஆத்மி வாக்களிக்கும்'' என்று பதிவிட்டுள்ளார்.
மசோதாவில் என்ன
இந்த மசோதாக்கள் அறிவிக்கப்பட்ட விவசாய மண்டலங்களுக்கு வெளியே விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கும் தடையற்ற வர்த்தகத்தை இந்த மசோதா வழங்குகிறது. மேலும் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு முன்பு தனியார் நிறுவனங்களுடன் விவசாய ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கும் வழி வகை செய்கிறது.
சிவ சேனா
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் சிவ சேனா இந்த மசோதாக்களை ஆதரித்துள்ளது. மேலும், தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், ஓஎஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவையும் இந்த மசோதாக்களை ஆதரித்துள்ளன. இதே தெலுங்கு தேசம் கட்சி கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருந்தபோது இந்த மசோதாவை 2018ல் எதிர்த்து இருந்தது.
மத்திய அரசுக்கு அதிகாரம்
இந்த மசோதா உணவுப் பொருட்கள், உரங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக கொண்டு வந்துள்ளது. போர் அல்லது வெள்ளம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் உற்பத்தி, விநியோகம், வழங்கல் மற்றும் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
அழியும் பொருட்கள்
விவசாய உற்பத்தியில் தோட்டக்கலை விளைபொருட்களின் விலை சில்லறையில் 100 சதவீதம் அதிகரித்து இருந்தால், தோட்டக்கலை உற்பத்தி பொருட்களின் மீதான இருப்பு மற்றும் அழிந்துபோகாத விவசாய உணவுப் பொருட்களின் சில்லறை விலையில் 50 சதவீதம் அதிகரிப்பு இருந்தால் அதுசார்ந்த பொருட்களை இருப்பு வைக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் கொடுக்கிறது இந்த மசோதா.
பதுக்கல்
பெரிய நிறுவனங்கள், கார்பரேட்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை இருப்பு வைப்பதற்கு புதிய மசோதா வழி வகுக்கும். மேற்குவங்க பஞ்சம் 40 லட்சம் மக்களின் உயிர்களை பழி வாங்கி இருந்தது. இந்த நிலையில் இந்த மசோதாவால் மக்களுக்கும் ஆபத்து உள்ள்ளது என்று காங்கிரஸ் எம்பி அதிர் ரஞ்சன் சவுத்திரி தெரிவித்து இருக்கிறார். கறுப்புப் பணம் ஒழிக்கிறோம் என்று கூறிக் கொண்டு பதுக்கலுக்கு மத்திய அரசு வழி வகுக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.