வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... டெல்லியை அதிரவைத்த தமிழக விவசாயிகள் - தடுத்த காவலர்கள்
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் டெல்லி சென்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி சென்ற நிலையில் அவர்களை டெல்லி நகர வீதிக்குள் நுழைய விடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
கடந்த ஆண்டு பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது. இது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 7 மாதங்களாக கடும் குளிர், வெயில் மழையையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றன. டிராக்டர்களை வீடுகளாக பயன்படுத்தியும் சாலைகளில் உணவு சமைத்து சாப்பிட்டும் போராடி வரும் விவசாயிகள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் எதிர்கட்சியினரும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டு விவசாயிகளுக்கு அதரவு தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தினமும் வந்து போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒவ்வொரு மாநில விவசாயிகளும் சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நேற்று அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழக கரும்பு விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கம் என பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மூலம் டெல்லி சென்றனர். அவர்களை போலீசார் டெல்லி நகர வீதிக்குள் செல்ல விடாமல் தடுத்தனர்.
விவசாயிகளும் டெல்லி ரயில் நிலைய வளாகத்தில் சிறிது தூரம் பேரணி நடத்திய பின்னர் அங்கேயே அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில், மதுரை லோக்சபா தொகுதி உறுப்பினர் வெங்கடேசன், கோவை லோக்சபா தொகுதி உறுப்பினர் பி.ஆர் நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் பேரணியாக சென்ற விவசாயிகளை போலீசார் வேன்களில் ஏற்றிச் சென்று சிங்கு எல்லையில் விட்டனர்.
இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக போராடி வரும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைட் செய்தியாளர்களிடம் பேசினார், ராம்பூரில் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் 26 ஆயிரம் விவசாயிகளிடம் பயிர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் 11 ஆயிரம் விவசாயிகள் போலியானவர்கள் என்று குற்றம் சாட்டினார்.
உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த தீவிர பிரசாரம்- விவசாயிகள் ராகேஷ் திகாயத்
நாங்கள் இதற்கான ஆவணத்தை வழங்குவோம் என்று கூறிய அவர், பள்ளிகள், மற்றும் கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களில் விவசாயம் நடப்பதாக காட்டப்படுகிறது. ராம்பூரில் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் பயிர்களை வாங்கும்போது, அரவையாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெரிய அளவில் கொள்ளையடித்தனர் என்று புகார் கூறினார்.
ராம்பூரில் நடிகை ஜெயபிரதாவின் பள்ளியின் நிலத்தில் சாகுபடி நடந்ததாக காட்டி அங்கிருந்து பயிர்கள் வாங்கப்பட்டதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது. முழு விஷயமும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். ராம்பூர் தவிர மற்ற மாவட்டங்களிலும் நடந்த இது போன்ற மோசடிகளை அம்பலப்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூலை 22 முதல் சுமார் 200க்கும் விவசாயிகள் ஜந்தர் மந்தரில் முகாமிட்டு, விவசாயிகள் பாராளுமன்றம் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜந்தர் மந்தர் பகுதிகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 14 எதிர்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.