ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
டெல்லி: விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக விவசாயச் சங்க தலைவர்கள் பிரச்சாரம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
Recommended Video
விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகரை முற்றுகையிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றர்
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது.
பாஜகவுக்கு எதிராகக் களமிறங்கும் விவசாயிகள்
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக ஐந்து மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். இது குறித்து விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த பல்பீர் எஸ் ராஜேவால் கூறுகையில், "நாங்கள் எந்தவொரு கட்சியையும் ஆதரிக்க மாட்டோம், ஆனால் பாஜகவை தோற்கடிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரத்தை மேற்கொள்வோம். மோடி அரசு விவசாயிகளை எப்படி நடத்துகிறது என்பது குறித்து மக்களிடம் தெரிவிப்போம்" என்று கூறினார்.
பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம்
இது குறித்து ஸ்வராஜ் இந்தியா விவசாய அமைப்பின் யோகேந்திர யாதவ் கூறுகையில், "விவசாய சட்டங்களைக் கொண்டு வந்த பாஜ மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவோம். இது குறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வோம். வரும் மார்ச் 12ஆம் தேதி கொல்கத்தாவில் மிகப் பெரிய பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
கைகோர்க்கும் வணிக அமைப்புகள்
போராடும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தனியார்மயமாக்கலுக்கு எதிராகப் போராடும் வணிக அமைப்புகளுடன் கைகோர்த்துப் போராட விவசாயச் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. வரும் மார்ச் 15ஆம் தேதி நாடு முழுவதும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக வணிக அமைப்புகள் போராட்டம் நடத்தும் என்றும் அந்த போராட்டத்தில் விவசாயிகளும் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடன்பாடு இல்லை
விவசாய சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை 12 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. கடைசியாக இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுப் பல வாரங்கள் ஆகிவிட்டன. இருப்பினும், மத்திய அரசு விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.