உச்சநீதிமன்ற படியேறிய விவசாய சங்கம்.. 3 விவசாய சட்டங்களையும் செல்லாது என அறிவிக்க அதிரடி மனு
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாரதிய கிசான் என்ற விவசாயிகள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.
மத்திய அரசுடன் இதுவரை நடைபெற்ற ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளது விவசாய சங்கம்.
நாடாளுமன்றத்தில் செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இரண்டு வாரங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து கொண்டே செல்கிறது.
கர்நாடகாவில் இன்று தனியார் மருத்துவர்கள் ஓபிடி, வார்டுகளில் நோயாளிகளை பார்ப்பதை தவிர்த்து போராட்டம் நடத்தினர். அரசு பஸ் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஸ்டிரைக் நடத்தி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலம், தினம் தினம் பல்வேறு போராட்டங்களை பார்த்துவரும் களமாக மாறிவிட்டது. இதனிடையில் உச்சநீதிமன்றத்தில் பாரதிய கிசான் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில் , கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசைக்கு விவசாயிகள் ஆட்பட வேண்டிய நிலைமைக்கு மூன்று சட்டங்களும் தள்ளிவிடும் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் தொடர் போராட்டம்-உச்சநீதிமன்ற வழக்கில் தங்களது வாதங்களையும் கேட்க கோருகிறது விவசாய சங்கம்!
இந்த சட்டங்கள் அனைத்தும் தன்னிச்சையானவை. போதிய விவாதம் இல்லாமல் சட்டமாக இயற்றப்பட்டுள்ளன என்று அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டங்களை எதிர்த்து ஏற்கனவே சில வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில்தான் விவசாயிகள் சங்கமும் மனுதாக்கல் செய்துள்ளது