டெல்லி விவசாயிகள் போராட்டம்... 87 நாட்களில் 248 பேர் உயிரிழப்பு
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 87 நாட்களில் 248 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக சன்யுகட் கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) என்ற விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் விவசாயிகள் தலைநகரில் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். கடந்த 87 நாட்களில் மட்டும் 48 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக சன்யுகட் கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
202 பேர் உயிரிழப்பு
போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் 202 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 36 பேரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேரும் இந்தப் போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு விவசாயியும் போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் மாரடைப்பு, கடும் குளிர், வாகன விபத்து ஆகியவற்றாலேயே விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
காரணம் என்ன?
குறிப்பாக டெல்லியில் கடும் குளிர் நிலவும் ஜனவரி மாதம் மட்டும் 108 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் மிக மோசமான நிலையில் எல்லையில் வசித்து வருவதாகவும் அவர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் கூட கிடைப்பதில்லை என்றும் விவசாய சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதனால் அவர்களுக்கு எளிதாக மோசமான நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அதேபோல விபத்துகளிலும் அதிகளவில் விவசாயிகள் உயிரிழப்பதாகவும் பாரதிய கிசான் சங்க பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங் தெரிவித்தார்.
தற்கொலை
மேலும், கடந்தாண்டு மட்டும் சராசரியாக வாரத்தில் ஐந்து விவசாயிகள் என்று 261 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சன்யுகட் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 93 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதேநேரம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் விவசாயிகள் தற்கொலை 96 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் விவசாய சட்டங்களின் மீதான அதிருப்தியே விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கக் காரணம் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
திட்டமிடப்பட்ட கொலைகள்
இது குறித்து பாரதிய கிசான் சங்க பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங் கூறுகையில், "இவையெல்லாம் திட்டமிடப்பட்ட கொலைகள். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியவுடன் ஒரு வாரத்திற்குள் இந்தப் பிரச்னையை அரசால் தீர்த்திருக்க முடியும். ஆனால் மத்திய அரசு தனது சொந்த மக்கள் மீது அலட்சியமாக இருந்தது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
நிவாரணம் அறிவிப்பு
மேலும், உயிரிழந்த விவசாயிகள் தியாகம் வீண் போகாது என்றும் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டங்களில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்குப் பஞ்சாப் அரசு தலா ஐந்து லட்ச ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது. அதில் சுமார் 100 விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஏற்கனவே நிவாரண தொகை அளிக்கப்பட்டுவிட்டதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.