டெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்
டெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்
டெல்லி: டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர்கள் போராட்டம் சீர்குலைந்து வன்முறை வெடிக்க காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துதான் என பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், ஊடகங்கள் குற்றம்சாட்டி உள்ளன. டெல்லி செங்கோட்டையில் சீக்கியர் கொடி ஏற்றுவதற்கும் தீப் சித்துவே காரணம் என்பது அவர்களது குற்றச்சாட்டு.
பஞ்சாப்- ஹரியானா நடிகர் தீப் சித்து. பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இல்லை. இருந்தபோதும் லோக்சபா தேர்தலின் போது பாஜக வேட்பாளர் சன்னி தியோலுக்காக தீவிர பிரசாரம் செய்தவர். பிரதமர் மோடி, சன்னி தியோலுடன் எடுத்துக் கொண்ட தீப் சித்துவின் புகைப்படங்களை வைத்து ஏற்கனவே சர்ச்சைகளும் வெடித்தன.
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது முதலே தீப் சித்துவும் பங்கேற்று வருகிறார். ஆனால் தீப் சித்துவின் பங்கேற்பை இடதுசாரி விவசாய சங்கங்கள் கடுமையாக ஆட்சேபித்து வந்தன. பாஜக ஆதரவு நபரான தீப் சித்துவிடம் அனைவரும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தன.
இந்நிலையில் டிராக்டர் போராட்டம் குறித்த திங்கள்கிழமை ஆலோசனை கூட்டத்தில் டெல்லிக்குள் டிராக்டர் ஊர்வலத்தை நடத்தியே தீருவோம் என முழங்கியிருக்கிறார் தீப் சித்து. இதற்கு ஆதரவாக ஒரு குழுவினரும் முழக்கம் எழுப்பி இருந்தனர். இதனை விவசாய சங்கத்தின் பிரதிநிதிகளும் எதிர்த்திருந்தனர்.
செங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றவில்லை - புகைப்படத்துடன் நிரூபணம்
இதனிடையே டெல்லிக்குள் டிராக்டர் ஊர்வலம் நடத்தப்பட்டு செங்கோட்டையில் சீக்கியர் கொடியும் ஏற்றப்பட்டது. செங்கோட்டை நிகழ்வுகளில் தீப் சித்துவும் இருந்தார். அவர்தான் தமது கையில் இருந்த சீக்கியர் கொடியை செங்கோட்டை கோபுரத்தில் ஏற்றுமாறு கொடுத்தார். இந்த வீடியோ காட்சிகள் இப்போது சர்ச்சையாகவும் வெடித்துள்ளது.
டெல்லி போர்க்களமானதற்கு காரணமே பாஜக ஆதரவாளரான நடிகர் தீப் சித்துதான் என ஊடகங்கள், விவசாய சங்கங்கள் என அனைவருமே கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
இதனிடையே பாஜக எம்பி சன்னி தியோல் தமது ட்விட்டர் பக்கத்தில், தீப் சித்துவுடன் எனக்கோ என் குடும்பத்தினருக்கோ எந்த தொடர்பும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த நிகழ்வுகள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.