டிசம்பர் 29-ல் பேச்சுவார்த்தைக்கு தயார்... எங்கள் குரலை அரசு கேட்கணும்... விவசாயிகள் அறிவிப்பு!
டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், டிசம்பர் 29-ல் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என அறிவித்து உள்ளனர்.
பேச்சுவார்த்தையின்போது எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். வேளாண் சட்டங்களை வாபஸ் பெரும் வரையில் போராட்டம் தொடரும் என்ற முடிவில் உறுதியாக உள்ளதாகவும் விவசாயிகள் கூறினர்.
போராடும் விவசாயிகளுக்கு எதிராக எதிர்மறையான விளம்பரம் பரப்புவதற்கு முழு அரசு முறையையும் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
தொடர் போராட்டம்
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த புதிய சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி முறைக்கு பாதகமாக அமைந்திருப்பதாக கூறும் விவசாயிகள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இன்று 31-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
அனைத்தும் தோல்வி
மத்திய அரசு சார்பில் விவசாயிகளுடன் இதுவரை பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமித்ஷா உள்ளிட்ட பல அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஏற்கனவே அறிவித்து உள்ளனர்.
உறுதியாக உள்ளோம்
ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட அர்த்தமற்ற திருத்தங்களை மீண்டும் கொண்டு வரக்கூடாது என்றும், ஆக்கப்பூர்வமான உறுதியான திட்டங்களை எழுத்துப்பூர்வமாக கொண்டு வரவேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.
பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்நிலையில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் டெல்லி-ஹரியானாவில் உள்ள சிங்கு எல்லையில் இன்று மாலை ஆலோசனை நடத்தினர். அப்போது மத்திய அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என அவர்கள் முடிவெடுத்தனர். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அவர்கள் மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினர்.
செவிசாயுங்கள்
அந்த கடிதத்தில் விவசாயிகள் கூறி இருப்பதாவது:- வருகிற டிசம்பர் 29-ல் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும். பேச்சுவார்த்தையின்போது எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். ஆனால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்ற முடிவில் உறுதியாக உள்ளோம்.
நிறுத்துங்கள்
நீங்கள்(மத்திய அரசு) எங்களுக்கு எழுதிய கடிதத்தில், அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மரியாதையுடன் செவிசாய்க்க விரும்புகிறது என்று கூறுகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே அதனை விரும்பினால் எங்கள் கோரிக்கைகள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துங்கள், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு எதிராக எதிர்மறையான விளம்பரம் பரப்புவதற்கு முழு அரசு முறையையும் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.