டிராக்டர் பேரணி பாதையை மாற்றி.. மத்திய டெல்லிக்குள் வர சில விவசாயிகள் முயற்சி.. டெல்லி காவல்துறை
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் சிலர் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாதையை தவிர்த்து விட்டு வேறு பாதையில் செல்ல முயற்சி செய்ததால் போலீசாருக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியின் புறநகர் பகுதிகளில் மூன்று இடங்களில் பேரணி புறப்பட்டு சற்று தூரம் உள்ளே வந்து மறுபடி எல்லை பகுதியை நோக்கி செல்வது போல பேரணி பாதை திட்டம் வகுக்கப்பட்டது.
இதற்கு சம்மதித்த விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு போராட்டத்தில் பங்கேற்க டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியது. ஆனால், டெல்லி நாங்லோய் சந்திப்பில் விவசாயிகள் சிலர் டிராக்டர் பாதைகளை மாற்றினர். சில விவசாயிகள் அங்கே இருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு மத்திய டெல்லியை நோக்கி செல்ல முற்பட்டனர். எனவே காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். அப்போது தடியடி சம்பவம் நடைபெற்றது, என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம் போராட்டம் நடத்தியதில் சில விவசாயிகள்தான் இவ்வாறு வழியை மாற்றி கொண்டு மத்திய டெல்லியை நோக்கி செல்ல முற்பட்டுள்ளனர். மற்ற விவசாயிகள் வந்த வழியே திரும்பி உள்ளனர். மேலும், பாதையை மாற்றினால் நாம் நடத்தி வரும் அஹிம்சை போராட்டத்திற்கு கெட்ட பெயர் வரும் என்றும் சக விவசாயிகளை பிற விவசாயிகள் எச்சரித்து திரும்பிவர கோரியுள்ளனர்.
எனவே அவர்களைக் கட்டுப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்ததால் மெல்ல மெல்ல பதட்டம் நிலவிய இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்று காவல்துறை தெரிவிக்கிறது.