விஸ்வரூபம் எடுக்கும் விவசாயிகள் போராட்டம்... கை கோர்க்கும் பீகார் விவசாயிகள்?
டெல்லி: விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மூன்று புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், 27ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லி காசிப்பூர் பகுதியில் டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூடப்படும் எக்ஸ்பிரஸ் சாலை
ஏற்கனவே விவசாயிகள் போராட்டம் காரணமாக காஜியாபாத்தில் இருந்து டெல்லி செல்லும் சாலையின் ஒரு புறம் மட்டும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் சாலை இருபுறமும் மூடப்படுவதாக டெல்லி போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
போராடவில்லை பேசுகிறோம்...
இந்தப் போராட்டம் குறித்து விவசாய அமைப்பான பாரத் கிஷான் யுனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், "நாங்கள் மக்களுடன் பேசுகிறோம், யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்தவில்லை. நேற்றுகூட, டெல்லி-காசிப்பூர் சாலையில் சென்றவர்களிடம் விவசாயிகள் சில நிமிடங்கள் மட்டுமே உரையாடினர். நாங்கள் எந்த சாலையையும் மறித்துப் போராடவில்லை. விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து வீட்டிலும் விவாதிக்க வேண்டும் என்று மட்டுமே சாலையில் செல்பவர்களிடம் தெரிவித்தோம்" என்று தெரிவித்தார்.
போராட்டம் ஏன்?
நேற்று காலை உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள புராண்பூர், குத்தார் உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் செல்ல முயன்றனர். ஆனால், அவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் டிராக்டர்களை தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.
பீகார் விவசாயிகளுக்குக் கோரிக்கை
இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்கப்பட்டதால் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ள பீகார் விவசாயிகளும் தங்கள் போராட்டத்தில் இணைந்து ஆதரவளிக்க வேண்டும் என்று தலைநகரில் போராடி வரும் விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பீகாரில் நிலைமை என்ன?
பீகார் மாநிலத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னரே வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுவை (ஏபிஎம்சி) அம்மாநில அரசு கலைத்தது. இதன் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாகப் பீகார் உள்ளது. பீகாரில் உள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காததால் துயரத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் பிற மாநிலங்களில் வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை ரத்து
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து விவசாய அமைப்புகளுடன் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தை நடத்தினார். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் மிக உறுதியாக இருந்ததால் ஐந்துகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும்கூட எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவிருந்த 6ஆம்கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், விவசாயிகள் கூறும் தேதியில் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராகவுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.