டிச. 8இல் பாரத் பந்திற்கு விவசாயிகள் அழைப்பு.. வலுவடையும் டெல்லி சலோ போராட்டம்
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி வரும் 8-ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறும் என டெல்லி சலோ விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் போராட்டம் மேலும் வலுப்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கடுங்குளிரிலும் இவர்களது போராட்டத்தால் டெல்லியில் அனல் கக்குகிறது. இதுவரை 4 கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.
ஆனால் இதில் சுமுக முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இதனால் இன்று மதியம் 5-ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வரும் 8-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதி லகோவால் கூறுகையில் நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் உருவபொம்மைகள் எரிக்கப்படும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள், விருதுகளை டிசம்பர் 7-ஆம் தேதி விவசாயிகள் திருப்பித் தர உள்ளார்கள்.
வரும் 8-ஆம் தேதி அனைத்து டோல்கேட்டுகளும் விவசாயிகளால் முடக்கப்படும் என்றார். இந்த நிலையில் டெல்லியில் குவிந்துள்ள விவசாயிகளால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.