விவசாயிகள் டெல்லியில் போராட்ட இடத்தை மாற்றுங்கள்.. உச்சநீதிமன்றம் அறிவுரை
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காக, டெல்லியின் எல்லைகளில் 48வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகள் போராட்டங்கள் காரணமாக, நொய்டா மற்றும் காசியாபாத்தில் இருந்து டெல்லி வரும் பாதையில் சில்லா மற்றும் காசிப்பூர் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இது தவிர, சிங்கு, ஆச்சண்டி, பியாவ் மணியாரி, சபோலி மற்றும் மங்கேஷ் ஆகிய இடங்களில் உள்ள டெல்லி-ஹரியானா எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் விவசாயிகள் போராட்டம் பற்றி இன்று வழக்கு விசாரணை நடைபெற்றபோது, விவசாயிகள் டெல்லியிலுள்ள ராம்லீலா மைதானம் அல்லது வேறு இடத்தில் போராட்டம் நடத்தலாம், இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில், விவசாயிகள் நடத்த உள்ள டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க டெல்லி போலீஸ் கோரிய மனுவுக்கு பதிலளிக்க விவசாய அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விவசாயிகள் போராட்டம்- பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
விவசாயிகள் போராட்ட இடத்தை மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுரை செய்துள்ளதை ஏற்று விவசாயிகள் நடந்து கொண்டால், டெல்லிக்கு வரும் சாலைகள் திறக்கப்படும் சூழல் உருவாகும். ஆனால் விவசாய சங்கத்தினர் இந்த கோரிக்கையை ஏற்பார்களா என்பதுதான் தெரியாது. மேலும் இது தொடர்பாக டெல்லி போலீஸ் தனது மனுவை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே 3 சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.