போலீசுக்கு பூக்கொடுத்து வாழ்த்திய விவசாயிகள்...இதுவும் டெல்லியில் தான்
புதுடெல்லி : டில்லியில் கலவரம் மட்டுமல்ல, விவசாயிகளும் போலீசாரும் ரோஜா பூக்கள், உணவுகளை பரிமாறிக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.
டில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம், கலவரமாக மாறியதால் நிலவரம் மோசமடைந்துள்ளது. கலவரம் காரணமாக டில்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம், டில்லி - உத்திர பிரதேச மாநில எல்லையில் உள்ள சில்லா பகுதியில் போலீசாரும், விவசாயிகளும் பூக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். காலையில் டில்லியில் கலவரம் துவங்கிய நிலையில், பிற்பகலில் டில்லிக்கு பேரணிக்காக வந்தவர்களுக்கு நொய்டா கூடுதல் துணை கமிஷனர் ரான்விஜய் சிங் தலைமையிலான போலீசார், உபி/. விவசாய சங்க தலைவர் யோகேஷ் பிரதாப் சிங்கிற்கு ரோஜாக்களை வழங்கினர். பதிலுக்கு விவசாயிகளும் போலீசாருக்கு தாங்கள் தயாரித்த உணவை வழங்கி உள்ளனர்.
பூக்கள் கொடுத்தாலும் விவசாயிகள் யாரையும் போலீசார் தடுத்து நிறுத்தவில்லை. கடந்த 2 மாதங்களாக சில்லா எல்லையில் வாகனங்கள் ஏதும் அனுமதிக்கப்படவில்லை. டிராக்டர்கள் மீருட் மற்றும் ஆக்ரா எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. ஆனால் இன்று, தாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான விவசாயிகளே உ.பி.,யில் இருந்து போராட்டத்திற்கு வந்ததால், அதனை பாராட்டும் விதமாகவே போலீசார் பூக்களை வழங்கி உள்ளனர்.
வாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் பயங்கர மோதல்.. 3 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்
ஒருவருக்கொருவர் புன்னகையுடன் அன்பை பரிமாறிப் பிறகு, விவசாயிகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பாதையில் பேரணி சென்றுள்ளனர். போலீசாரும் விவசாயிகளை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.
டில்லியின் பல பகுதிகளிலும், செங்கோட்டையிலும் நடந்த கலவரம் மட்டுமல்ல, சில்லா எல்லையில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவமும் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமைக்கும், வேற்றுமையில் ஒற்றுமை தன்மைக்கும் இச்சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. குடியரசு தினத்தில் டில்லி கலவரத்தால் ஏற்பட்ட அவமானத்தை மாற்றி, பெருமை அடைய வைத்துள்ளது இச்சம்பவம்.