விவசாயிகள் போராட்டம் தீவிரம்.. டெல்லி-ஜெய்ப்பூர் சாலை முற்றுகை.. பெண்களும் களத்திற்கு வருகிறார்கள்
டெல்லி: 3 புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாய அமைப்பின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
சனிக்கிழமையான இன்றைய தினம் சிங்கு (டெல்லி-ஹரியானா) எல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விவசாயிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சன்யுக்தா கிசான் அந்தோலன் சங்கத் தலைவர் கமல் ப்ரீத் சிங் பன்னு கூறியதாவது:
எங்கள் கோரிக்கையில் நாங்கள் ஒருபோதும் பின்வாங்கவில்லை. ராஜஸ்தானின் ஷாஜகான்பூரிலிருந்து, ஞாயிற்றுக்கிழமை கலை 11 மணிக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பைத் தொடங்க உள்ளனர். இந்த அணிவகுப்பு டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிடும். எங்கள் நாடு தழுவிய அழைப்பிற்குப் பிறகு, ஹரியானாவின் அனைத்து டோல் பிளாசாக்களும் இன்று இலவசமாக வாகனங்களை அனுமதித்துள்ளன.
டிசம்பர் 14 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கு எல்லையில் ஒரே மேடையில் அனைத்து விவசாயத் தலைவர்களும் உண்ணாவிரதத்தில் அமர்வார்கள்.
விவசாயிகள் போராட்டத்தை தேச விரோத சக்திகள் கைப்பற்ற முயற்சி - நிர்மலா சீதாராமன்
மூன்று விவசாய சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். திருத்தங்கள் தேவையில்லை. மத்திய அரசு எங்கள் இயக்கத்தையும், போராட்டத்தையும் தடுக்க முயல்கிறது. ஆனால் ஆனால் நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை தொடருவோம்.
டிசம்பர் 15க்குப் பிறகு, அனைத்து தொழிலாளர்கள், பெண்கள் எங்கள் கூட்டங்களுக்கு வருவார்கள். டெல்லிக்கு செல்லும் வழியில் விவசாயிகளின் வண்டிகள் நிறுத்தப்படுகிறது. விவசாயிகளை டெல்லிக்கு அனுமதிக்க வேண்டும். டிசம்பர் 19க்கு முன்னர் எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், அதே தேதியில் குரு தேக் பகதூரின் தியாக நாளிலிருந்து உண்ணா விரதத்தை துவங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.