மோசமாகும் வானிலை... கான்கிரீட் கூடாரம் அமைக்கும் விவசாயிகள்... அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகரில் போராடும் விவசாயிகள் மோசமான வானிலையிலிருந்து தப்பிக்க புதிய கான்கிரீட் கூடாரங்களை அமைத்து வருகின்றனர்.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுத் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர். டெல்லியைச் சுற்றியிருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கி, அவற்றில் கூடாரங்களை அமைத்து, கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மோசமான வானிலை
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே டெல்லியில் வானிலை மோசமடைந்து, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் அமைத்துள்ள கூடாரங்களில் மழை நீர் புகுந்துள்ளது. மேலும், சில கூடாரங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
எழுப்பப்படும் கட்டடங்கள்
இந்நிலையில், கடும் மழை பெய்தாலும் தாங்கும் வகையிலான கூடாரங்களை விவசாயிகள் தற்போது எழுப்பி வருகின்றனர். மழையைத் தாங்க மூங்கில், இரும்பு தடி ஆகியவற்றைக் கொண்டும் கூடாரங்களை எழுப்புகின்றனர். சில இடங்களில் கான்கிரீட் மூலமும் சுவர்களை விவசாயிகள் கட்டுகின்றனர். மேலும், விவசாய தலைவர்கள் தினமும் போராட்டக்காரர்களிடம் உரையாற்றும் இடத்தில் ஒரு மெகா கூடாரமும் அமைக்கப்பட்டுள்ளது.
டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு
மத்திய அரசைக் கண்டித்து இன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், மோசமான வானிலை காரணமாக இந்தப் போராட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. டெல்லியில் நிலவும் மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை
விவசாய சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை ஏழு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அதில் இலவச மின்சாரம், விவசாய கழிவுகளை எரிப்பது ஆகியவற்றில் மட்டுமே இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஆகியவற்றில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.