விவசாயிகளின் அடுத்தகட்ட மூவ்.. டெல்லி புராரி மைதானத்தில் திரண்டு போராட்டம்!
புதுடெல்லி: வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் இன்று 3-வைத்து நாளாக போராட்டம் நடத்தினர்.
புராரி மைதானத்தில் திரண்டு இருக்கும் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
மத்திய வேளாண்துறை அமைச்சர் விவசாயிகளிடம் பேசசுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
கடும் மோதல்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப், அரியானா விவசாயிகள், நேற்று முன்தினம் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்ற அவர்களை அரியானா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரின் தடுப்புகளை விவசாயிகள் தூக்கி எரிந்ததால், கடும் மோதல் ஏற்பட்டது.
வழியெங்கும் போர்க்களம்
கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை விரட்டியடிக்க போலீசார் முயன்றனர். ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கி சென்றனர். நேற்று 2-வது நாளாக அவர்கள் தலைநகர் நோக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியெங்கும் அவர்களுக்கு போலீசார் தடையை ஏற்படுத்தினார். சாலைகளில் குழிகளை வெட்டினர், மணல் நிரம்பிய லாரிகளை நிறுத்தினர்.
தடியடி நடத்தினர்
தடையை எதிர்த்து விவசாயிகள் முன்னேறி சென்றனர். டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் குவிந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். இதனால் எல்லையில் போர்க்களம்போல் பதற்றம் உருவானது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எனினும், விவசாயிகள் பின்வாங்காமல் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
கடைசியில் வெற்றி
டெல்லிக்கு செல்வதில் உறுதியாக இருந்தனர். விவசாயிகளை தடுத்து நிறுத்தியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததால், நிலைமை தீவிரமானதால் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் விவசாயிகளை டெல்லிக்குள் நேற்று மாலை போலீசார் அனுமதி அளித்தனர். புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றும் போராட்டம்
விவசாயிகள் செல்லும் வழிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் புறப்பட்டனர். டிராக்டர்களுடன் புராரி மைதானத்திற்கு வந்து சேர்ந்த விவசாயிகள், இன்று காலை 3-வது நாளாக போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் அந்த மைதானம் நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர். அங்கேயே சமைத்து சாப்பிடுவதற்காக பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்துள்ளனர்.
தலைநகரில் பதற்றம்
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படாத வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்களத்தில் உள்ள அவர்கள் தெரிவித்தனர். இதனால் தலைநகரில் பதற்றம் நிலவுவதால் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளுடன் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அரசு அவர்களுடன் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.