விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஜன.26-ல் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஜனவரி 26-ல் விவசாயிகள் 1 லட்சம் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர்.
விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் வாட்டும் குளிரிலும் 2 மாதங்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
புதிய விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். மேலும் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண 4 வல்லுநர்கள் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
ஆனால் இந்த 4 பேரும் விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்பதால் இக்குழுவை ஏற்க முடியாது என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளின் அடுத்த கட்ட போராட்டமாக வரும் 26-ந் தேதி டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லி நோக்கி இன்று புறப்பட்டனர்.