விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி.. 38-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்..!
டெல்லி: விவசாய சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் 38-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுதந்திர இந்தியாவில் இதுவரை இப்படியொரு போராட்டம் நடைபெற்றதில்லை என்று கூறும் அளவுக்கு விவசாயிகள் பெருமளவில் திரண்டுள்ளனர். தங்கள் கோரிக்கையில் மிகவும் தீர்க்கமாக உள்ள அவர்கள், மத்திய அரசுடன் 6 முறை பேச்சுவார்த்தை மேற்கொண்டும் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இதனிடையே இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தரப்பில் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட இரண்டு விவகாரங்களுக்கு மட்டும் உறுதி கொடுக்கப்பட்டது. விவசாய சட்டங்களை முழுமையாக திரும்பப்பெறுவது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.
கர்நாடக கிராம பஞ்சாயத்து தேர்தல்.. விவசாயிகள் பாஜகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர்.. சித்தராமையா தாக்கு
தங்கள் போராட்டத்தின் நோக்கமே புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பது தான் எனக் கூறி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 38-வது நாளாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நாடே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ள நிலையிலும், விவசாய பெருங்குகுடி மக்கள் வீதியில் அமர்ந்து உரிமைக் குரலை உரக்க எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் இந்த பிரம்மாண்ட போராட்டமானது உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கனடா இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.