டெல்லி நீடிக்கும் போராட்டம்: விவசாயிகளின் கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கத்தை முடக்கிய பேஸ்புக்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பக்கத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பேஸ்புக் நிறுவனம் முடக்கியது.
டெல்லி: விவசாயிகளின் பேஸ்புக் பக்கமான கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பக்கத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பேஸ்புக் நிறுவனம் முடக்கியது. டெல்லியின் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான தகவல்களை அதிகம் பதிவிட்டு நேரலையாக ஒளிபரப்பியதால் இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டது. பல மணி நேரம் கழித்து மீண்டும் பேஸ்புக் பக்கம் செயல்படத் தொடங்கியது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 26ம் தேதி முதல், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டம் 26வது நாட்களை எட்டி இருக்கிறது. மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்பட வில்லை. மாறாக, மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை ஏற்க மறுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தை இன்று முதல் தொடங்கி உள்ளனர்.
இந் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பெயரிலான பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கி இருக்கிறது. இந்த பக்கத்தின் வழியாக போராட்டக்களத்தில் நடக்கும் தகவல்களை அனைத்து தரப்பினரும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிந்தது. திடீரென இந்த பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் முடக்கியது.
இந்த பக்கத்தை சுமார் பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதே போன்று இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்று வரும் நாள்முதல் பல தகவல்களை உடனுக்குடன் இந்த பேஸ்புக் பக்கத்தில் விவசாயிகள் பதிவிட்டு வருகின்றனர்.
போராட்டக் குழுவின் தலைவர்களில் ஒருவரான, யோகேந்திர யாதவ், போராட்ட நிகழ்வுகளை தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பி வந்தார். திங்கட்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஈடுபடுவர் என்றும், அதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பர் என்றும் கூறி இருந்தார். அதன் பிறகே விவசாயிகள் சங்கத்தின் பேஸ்புக் பக்கமும் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டது.
சில மணிநேரம் முடக்கப்பட்டிருந்த விவசாயிகளின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கின. விவசாயிகளின் பேஸ்புக் பக்கமும், இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.