விவசாயிகள் போராட்டத்தை தேச விரோத சக்திகள் கைப்பற்ற முயற்சி - நிர்மலா சீதாராமன்
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்கின்றன என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த 3விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதிலும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லி வந்து குவிந்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
இதுவரை அரசுடன் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் நிர்மலா சீதாராமன் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது: விவசாயிகள் பயப்படுவது போல குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு வழங்காமல் இருக்காது. இதுவரை எந்த ஒரு சீசனிலும் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்காமல் இருந்ததில்லை. ஒருவேளை அப்படி வழங்காமல் இருந்திருந்தால் அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது.
ஆனால் விவசாயிகள் தேவையில்லாமல் அச்சப்படுகிறார்கள். மேலும் விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் கைப்பற்ற தீவிர முயற்சி செய்து வருகின்றன. விவசாயம் மற்றும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காக தற்போது போராட்டம் நடைபெறவில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கே அதிகாரம்... எங்களை நம்புங்க... விவசாயிகளை சமாதானப்படுத்தும் மோடி!
மற்றொரு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், நக்சல்களால் விவசாயிகளின் போராட்டம் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை விவசாயிகள் உணர வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் சட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் சட்டத்தில் சில சரத்துக்கள் தங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறி விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன. ஒரு கோரிக்கையை வைத்து விட்டு கிளம்பிச் சென்றதும் அந்த கோரிக்கையை நிறைவேற்றப்பட்டது கிடையாது. இதை அவர்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்பதை பார்த்தால் போராட்டம் அவர்கள் கையை விட்டு நழுவி விட்டதாகவே தெரிகிறது.
இந்திய நாட்டின் விவசாயிகள் அமைதியை விரும்புபவர்கள். மக்களுக்கு உணவு வழங்குபவர்கள். எனவே மாவோயிஸ்டுகள் மட்டும் நக்சல் அமைப்பினர் தங்களில் ஊடுருவுவதை அவர்களை விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.