பொறுமை இழப்பு.. கைதாகிறார்களா ட்விட்டர் இந்தியா உயர் அதிகாரிகள்?
டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் ட்விட்டர் கணக்குகளை நீக்கும் பணியை ட்விட்டர் தாமதப்படுத்தியதால், ட்விட்டர் இந்தியாவின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த குடியரசு தினத்தன்று, விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.
அப்போது சிலர் அத்துமீறி செங்கோட்டையில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் கேபிடோல் சம்பவத்திற்கு பிறகு செங்கோட்டை சம்பவம் உலகளவில் பேசுபொருளானது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். போராட்டம் தொடர்பான சிலரின் அவதூறு பக்கங்களை நீக்குமாறு ட்விட்டர் நிர்வாகத்திடம் இந்திய அரசு வலியுறுத்தியது.
மீண்டும் அனுமதி
இதையடுத்து சிலரின் பக்கங்களை ட்விட்டர் நீக்கினாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் கணக்குகள் செயல்பட அனுமதி அளித்தது. இதனால் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, 1,178 பேரின் கணக்குகளை முடக்க ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்தது.
சஸ்பெண்ட் செய்துள்ளோம்
பிறகு, 1,178 நபர்களில் 500 நபர்களின் கணக்குகளை முடக்கிய ட்விட்டர், பின்னர் இது குறித்து விளக்கமும் அளித்திருக்கிறது.அதில், அவதூறு, வன்முறைகளை ஆதரிப்பது, வன்முறைச் சம்பவங்களைத் தூண்டும் வகையிலான பதிவுகள் போன்ற நூற்றுக்கணக்கான கணக்குகளை முடக்கியுள்ளோம். விதிமீறலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களை சஸ்பெண்ட் செய்துள்ளோம்.
மற்ற நாடுகளில் செயல்படும்
இந்திய அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப சில பக்கங்களை முடக்கியிருக்கிறோம். இந்தக் பக்கங்கள் இந்தியாவில் மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கும். மற்ற நாடுகளில் அது செயல்படும். பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.
நடவடிக்கை இல்லை
அதற்கு ஏற்ப ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கணக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படிச் செய்தால், அது இந்தியச் சட்டத்தின் கீழ் சுதந்திரமாகக் கருத்து தெரிவிப்பதற்கான அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகிவிடும்.
இந்திய விதிமுறை
பயனாளர்களின் ஒரு ட்வீட், எங்கள் நிறுவனத்தின் விதியை மீறியிருந்தால், அந்த ட்வீட் உடனடியாக டெலிட் செய்யப்படும். அதேசமயம், அந்த நாட்டின் சட்டத்தை மீறும்படி அது இருந்தால், அந்நாட்டில் மட்டும் அந்த ட்வீட் நிறுத்திவைக்கப்படும்" என்று தெரிவித்தது.
அவசர உத்தரவு
இந்நிலையில், ட்விட்டரின் இந்த கருத்துக்கு மத்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதில், 'வன்முறையைத் தூண்டும் வகையிலான ஹேஷ்டேக்குகளை பலர் பயன்படுத்திய போது, அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே ட்விட்டர் அதை நீக்கியது. இந்த தாமதம் எங்களை பெரும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
செங்கோட்டை வன்முறை
அமெரிக்காவின் கேபிடோல் ஹில் வன்முறை சம்பவத்தின்போது, ட்விட்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. ஆனால், இந்தியாவின் செங்கோட்டை விவகாரத்தில் அப்படி செயல்படவில்லை. இரு சம்பவங்களில் ட்விட்டரில் வெவ்வேறு நிலைப்பாடும் எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது.
உத்தரவுகளுக்கு கட்டுப்படணும்
இந்தியாவுக்கு அதன் சட்டங்களே பிரதானம். இங்கு, சட்டப்பூர்வமாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு, இந்தியாவில் தொழில் செய்யும் எந்தவொரு வணிக நிறுவனமும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். உத்தரவுகளுக்கு உடனே கீழ்படிய வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுமை இழந்துவிட்டோம்
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் ட்விட்டர் கணக்குளை நீக்கும் பணியை ட்விட்டர் தாமதப்படுத்தியதால், ட்விட்டர் இந்தியாவின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ட்விட்டர் கணக்குகளை நீக்குவதை தாமதப்படுத்தியதால் தங்கள் பொறுமையை இழந்துவிட்டதாக அரசாங்கம் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.