வேளாண் மசோதாவை கண்டித்து பஞ்சாப், ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம், சாலை மறியல்
டெல்லி: வேளாண் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து ஹரியானா, பஞ்சாப்பில் உள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அது போல் டிராக்டர் பேரணியையும் அவர் முன்னெடுத்து தங்களது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்கள்: அதிமுக திடீர் எதிர்ப்பு-லோக்சபாவில் ஆதரித்த நிலையில் தடாலடி மாற்றம்!
விவசாயிகள் போராட்டம்
ஹரியானாவில் விவசாயிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாய சங்கத்தினர் 3 மணிநேரத்திற்கு சாலையை வழிமறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளை அழைத்தார்.
விவசாயிகள் தீவிரம்
அது போல் பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் இளைஞர் அணியினர் நடத்தி வரும் டிராக்டர் பேரணி பஞ்சாப்பிலிருந்து டெல்லிக்கு செல்கிறது. இன்று காலை மொகாலி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பேரணி தேசிய நெடுஞ்சாலை வழியாக அம்பாலாவை சென்றடைந்தது. பஞ்சாப்பில் நேற்றைய தினமும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் 31 விவசாய அமைப்புகள் கலந்து கொண்டன. வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விவசாய அமைப்பு
செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதியும் விவசாய அமைப்புகளின் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படவுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தையொட்டி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். அம்பலா, குருஷேத்ரா, சோனிபாட், ஜிந்த், சிர்சா, ஃபதேஹாபாத், ஹிசார், பிவானி ஆகிய ஹரியானாவின் முக்கிய நகரங்களில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
விவசாயிகள்
செப்டம்பர் 25, 26-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தையும் விவசாய அமைப்பினர் நடத்துகிறார்கள். இதுகுறித்து பஞ்சாப் விவசாயிகள் கூறுகையில் நாங்கள் விவசாய மசோதாவை எதிர்த்து போராடி வருகிறோம். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது.
ஜிஎஸ்டி
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்படக் கூடாது. இவை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தற்போதைய விவசாய மசோதா ஆகியவை மக்களுக்கு எதிராக அரசு எடுத்துள்ளது என்றனர். அண்டை மாநிலமாக டெல்லி எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் எல்லைகளில் எந்த வித போராட்டங்களும் நடைபெறவில்லை என போலீஸாக் தெரிவித்துள்ளார்கள்.