விவசாயிகள் போராட்டம்- பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 49 நாட்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே விவசாய சட்டங்கள் தொடர்பான வழக்குகள் மீது உச்சநீதிமன்றத்தில் 2-வது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் முடிவில் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை செயல்படுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மறு உத்தரவு வரும் வரை இந்த இடைக்கால தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இக்குழுவில்,
1) விவசாயிகள் சங்க தலைவர் புபீந்தர்சிங் மான்
2) இண்டர்நேஷனல் பாலிசி அமைப்பின் தலைவர் டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி
3) விவசாய பொருளாதார வல்லுநர் அசோக் குலாதி
4) மகாராஷ்டிரா சிவ்கேரி சங்கத்னாவின் அனில் தன்வாட்
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக இந்த குழுவின் முன்னர் ஆஜராகப் போவதில்லை என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர். இது உச்சநீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது. விவசாய சங்க தலைவர்கள் நேரில் வராவிட்டாலும் அவர்கள் வழக்கறிஞர்கள் கருத்தை முன்வைக்கலாம் என தலைமை நீதிபதி போப்டே கூறினார்.
இந்த குழுவுக்கான வரையறைகளையும் உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும்; இந்த குழு தொடர்பான பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான திமுக எம்பி திருச்சி சிவாவின் வழக்கறிஞரான வில்சன் எம்.பி. வலியுறுத்தினார்.