3 லட்சம் டிராக்டர்கள்- 5 எல்லைகளிலிருந்து முற்றுகை- இன்று டெல்லியை அதிரவைக்க போகும் விவசாயிகள் பேரணி
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 3 லட்சம் டிராக்டர்களுடன் தலைநகர் டெல்லியில் இன்று பிரமாண்ட பேரணியை விவசாயிகள் நடத்த உள்ளனர்.
விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், சுமார் இரண்டு மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், விவசாய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மிகப் பெரியளவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிராக்டர் பேரணிக்கு டெல்லி காவல் துறையினர் அனுமதி அளித்தனர். இந்த டிராக்டர் பேரணியின்போது, கலந்துகொள்பவர்கள் யாரும் மது அருந்தக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
டிராக்டர் பேரணியில் அணிவகுப்பு
இந்த டிராக்டர் பேரணியில் சுமார் 3 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த டிராக்டர் பேரணியில் விவசாயம் தொடர்பான அணிவகுப்புகளும் இடம் பெற்றிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவசாய முறை, பெண் விவசாயிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ளப்படும் விவசாய முறை, விவசாயிகளின் பிரச்னை ஆகியவற்றை விளக்கும் அணிவகுப்புகள் இதில் இடம்பெறவுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பிள்ளைகள்
இந்த விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பிள்ளைகளும் இந்த டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் பேரணியில் பங்கேற்கும் அனைத்து டிராக்டர்களிலும் தேசியக் கொடி பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
100 கிலோ மீட்டர் நடைபெறும் டிராக்டர் பேரணி
தலைநகர் டெல்லியில் ஐந்து எல்லைகளிலிருந்தும் இந்த டிராக்டர் பேரணி தொடங்கவுள்ளது. டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த பிறகு, டிராக்டர் பேரணி தொடங்கும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். சுமார் 100 கிலோமீட்டருக்கு நடைபெறும் இந்த பேரணி மாலை ஆறு மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள்
மேலும், பேரணியை சரியான முறையில் ஒருங்கிணைக்கக் கண்காணிப்பு அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் மருத்துவர்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 40 பேர் இருப்பார்கள். அதேபோல மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் பேரணி நடைபெறும் இடங்களில் நிறுத்தி வைக்கப்படும். ஒவ்வொரு டிராக்டரிலும் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்புப் பணிகளை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக் கவனித்துக்கொள்வார்கள் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.