எங்களை எப்படி தப்பா பேசலாம்...மன்னிப்பு கேளுங்க...3 பாஜக தலைவர்களுக்கு, விவசாயிகள் நோட்டீஸ்!
டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த 3 பாஜக தலைவர்களுக்கு பஞ்சாப் விவசாயிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் பாஜக தலைவர் ராம் மாதவ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தாங்கள் தெரிவித்த இழிவான, அவதூறான கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் அல்லது நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீசில் விவசாயிகள் கூறியுள்ளனர்.
தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவாக உள்ளன. ஆனால் சில அரசியல் தலைவர்கள் இந்த போராட்டம் தொடர்பாக சர்சைக்குரிய கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
நோட்டீஸ் அனுப்பினர்
இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த 3 பாஜக தலைவர்களுக்கு பஞ்சாப் விவசாயிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் பாஜக தலைவர் ராம் மாதவ் ஆகியோருக்கு பல்வேறு விவசாயிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மன்னிப்பு கேளுங்கள்
பல அரசியல் தலைவர்கள் போராட்டம் குறித்து நல்ல நம்பிக்கையுடனோ அல்லது பொறுப்புடனோ கருத்து வெளியிடப்படவில்லை என கூறியுள்ள விவசாயிகள் இவர்கள் 3 பேரும் தாங்கள் தெரிவித்த இழிவான, அவதூறான கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் அல்லது நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீசில் கூறியுள்ளனர்.
நாட்டின் முதுகெலும்பு
அமிர்தசரஸை சேர்ந்த விவசாயி, ஜஸ்கரன் சிங் பண்டேஷா, கிரிராஜ் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ''விவசாயிகள் தங்கள் இரத்தத்தையும், வியர்வையையும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் இடைவிடாமல் கொடுத்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்துக்கு விவசாயிகள் முதுகெலும்பாக உள்ளதாகவும் ஜஸ்கரன் சிங் பண்டேஷா தெரிவித்து உள்ளார்.
வெளிநாட்டு சக்திகள்
விவசாயிகள் போராட்டங்களில் விவசாயிகளின் நன்மை குறித்து எந்த பேச்சும் இல்லை. போராட்டங்களில், வெளிநாட்டு சக்திகளும் வந்துள்ளன. அங்கு காலிஸ்தான் அமைப்பு தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன என்று கிரிராஜ் சிங் சர்ச்சை கருத்து கூறியது குறிப்பிடத்தக்கது. ஜலந்தரைச் சேர்ந்த மற்றொரு விவசாயி ராம்னீக் சிங் ரந்தாவா, நிதின் படேலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
பீட்சா சாப்பிடுகின்றனர்
"விவசாயிகள், தேச விரோத சக்திகள், பயங்கரவாதிகள், காலிஸ்தானியர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் சீனா சார்பு மக்கள் என்ற பெயரில் இந்த போராட்டத்தில் பதுங்கியுள்ளனர். அவர்கள் பீட்சா எல்லாம் சாப்பிடுகின்றனர். தேச விரோத சக்திகள் அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கின்றனர் என்று நிதின் படேல் முன்பு சர்சையாக கூறியிருந்தார்.
ஆம் ஆத்மி சட்ட உதவி
சங்ரூரைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் சித்து என்ற விவசாயி ராம் மாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்குகளில் விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியின் சட்டக் குழு உதவுகிறது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.