நாளை பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் விதித்த கடும் நிபந்தனை..அமைச்சர்களுடன் அமித்ஷா நீண்ட நேரம் ஆலோசனை
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அமைப்பினர் புதன்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளன. அந்த கடிதத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்தும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது குறித்து மட்டுமே பேச்சுக்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் முகாமிட்டு போராடுகிறார்கள்,
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக மத்திய அரசை எச்சரித்து வருகிறார்கள்.
முன்னேற்றம் இல்லை
இதுவரை, ஐந்து சுற்று பேச்சுவார்த்தை மத்திய அரசு நடத்தி உள்ளது. கடைசியாக டிசம்பர் 5 ம் தேதி நடைபெற்றது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. அதே நேரத்தில் டிசம்பர் 9 ஆம் தேதி திட்டமிடப்பட்ட ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லை.
என்ன காரணம்
மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவுவதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இலக்காகக் கொண்ட பெரிய விவசாய சீர்திருத்தம் என்கிறது. ஆனால் புதிய சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை இல்லாமல் செய்வதுடன். மண்டி முறையை பலவீனப்படுத்தும் என்றும், இதன் மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகும் என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள்.
விதித்த நிபந்தனை
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அரசாங்கம் புதன்கிழமை ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள 40 விவசாய அமைப்புகள் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் எம்.எஸ்.பி மீதான சட்ட உத்தரவாதம் குறித்து மட்டுமே விவாதம் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன.
அமைச்சர்கள் பங்கேற்பு
இதற்கிடையில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை பேச்சுவார்த்தைக்கு முன்னதாக சந்தித்து நீண்ட நேரம் ஆலோசித்தனர்.. நாளை நடைபெற போகும் பேச்சுவார்த்தையில் வேளாண் அமைச்சர் தோமர், ரயில்வே அமைச்சர் கோயல் மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்ர் சோம் பிரகாஷ் ஆகியோர் விவசாயிகளுடன் பேச போகிறார்கள்.