பாஜ அரசு vs விவசாயிகள்... உச்சமடையும் விவசாயிகள் போராட்டம்... திணறும் தலைநகர்
டெல்லி: மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாகப் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் தற்போது நிலவும் கடும் குளிரையும் கருத்தில் கொள்ளாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் இன்று 31ஆவது நாளாக தொடர்கிறது. மேலும், மத்திய அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். தினமுன் 11 விவசாயிகள் 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
முற்றுகையிட்ட விவசாயிகள்.. ஹோட்டல் பின் பக்கம் வழியாக தப்பியோடிய பாஜக தலைவர்கள்.. பஞ்சாப்பில்
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவசாயிகள் ஆலோசனை
மேலும், தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க நாற்பது விவசாய அமைப்புகளும் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளனர். இதில் அவர்களின் எதிர்கால நடவடிக்கைகள் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு முழுவதும் உள்ள ஒன்பது கோடி விவசாயிகளுடன் உரையாடினார். அப்போது புதிய விவசாய சட்டங்கள் குறித்தும் விவசாயிகளின் போராட்டத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். இது குறித்து மேலும், "எதிர்க்கட்சிகள் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து பொய்களையும் வதந்திகளையும் பரப்புகின்றனர்.விவசாயிகளின் போராட்டத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து அறிவிக்கப்படும். இன்று என்னை எதிர்ப்பவர்களிடம் நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து அவர்களிடமும் பேச எனது அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் யாராலும் தவறாக வழிநடத்தப்படக்கூடாது" என்றார். மேலும், அந்நிகழ்ச்சியில் பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் ரூ. 18 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
ஓர் ஆண்டு பார்க்கலாம்
இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "புதிய வேளாண் சட்டங்களை ஒரு வருடம் அமல்படுத்திப் பார்க்கலாம். இந்த காலத்தில் புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று கண்டறியப்படாவிட்டால் அவற்றைத் திருத்த அரசு தயாராக இருக்கும்" என்றும் கூறினார்.
மத்திய அரசு அழைப்பு
மத்திய அரசுடன் விவசாய பிரதிநிதிகள் இதுவரை ஐந்துகட்ட போச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். ஆனால், பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத்தொடர்ந்து டிசம்பர் முதல் வாரம் நடைபெறவிருந்த 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது.
சட்டத்தை நீக்கத் தயாரா
இது குறித்து மூத்த விவசாயத் தலைவரான சிவ் குமார் கக்கா வியாழக்கிழமை கூறுகையில், "எங்கள் கோரிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. மேலும், இந்தப் புதிய பேச்சுவார்த்தையில் சட்டங்களை ரத்து செய்வது குறித்துப் பேச அரசு தயாராக இருக்க வேண்டும். மத்திய அரசின் இந்தப் புதிய கடிதம் எங்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு ஆர்வமில்லை என்ற தோற்றத்தை அளிக்க மத்திய அரசு இவ்வாறு செய்கிறது" என்றார்.
எதிர்க்கட்சிகள் ஆதரவு
விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தார். அதேபோல, பஞ்சாப், டெல்லி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்களுக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.