2021-ல் இந்தியாவின் நன்மதிப்பு உலகில் வலிமையானதாக திகழும்: மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
டெல்லி: 2021-ம் ஆண்டில் இந்தியாவின் நன்மதிப்பு உலக அரங்கில் வலிமையானதாக திகழும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுவது வழக்கம். இன்று காலை 11 மணிக்கு இந்த மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடியின் உரை: இன்று டிசம்பர் மாதம் 27ஆம் நாள். 4 நாட்களுக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. இன்றைய மனதின் குரல் ஒரு வகையில் 2020ஆம் ஆண்டின் நிறைவான மனதின் குரலாக ஒலிக்கும். இன்றைய நிகழ்வில் கடந்த ஆண்டின் அனுபவங்களும் 2021ஆம் ஆண்டுக்கான உறுதிப்பாடுகளும் இருக்கும்:
2021-ல் புதிய சிகரங்கள் தொடுவோம்
நமது தேசம், 2021ஆம் ஆண்டிலே, வெற்றிகளின் புதிய சிகரங்களைத் தொட வேண்டும். உலகத்தில் இந்தியாவிற்கென ஒரு அடையாளம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஊரடங்கால் உத்வேகம்
பொது ஊரடங்கு எப்படி உலகம் முழுமைக்கும் உத்வேகக் காரணியாக அமைந்ததோ, கொரோனா போராளிகளுக்கு எப்படி நாம் மரியாதை அளித்தோமோ, நமது ஒற்றுமையை வெளிப்படுத்தினோமோ, இவற்றையெல்லாம் பலர் நினைவு கூர்ந்தார்கள். நம் நாட்டில் சவால்களுக்கும், சங்கடங்களுக்கும் குறையேதும் இல்லை. கொரோனா காரணமாக உலகில் விநியோகச் சங்கிலியில் பல இடையூறுகள் ஏற்பட்டன.
தற்சார்பு நோக்கி
ஆனால் நாம் இவையனைத்திலும் இருந்து ஒரு புதிய கற்றலைப் பெற்றோம். நாட்டிலே ஒரு புதிய திறனும் பிறப்பெடுத்தது. இதன் பெயர் தான் தற்சார்பு.
புதிய உறுதிமொழி
அந்நிய பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பிலே உருவாக்கம் பெற்ற பொருள்களையே பயன்படுத்துவோம் என்று முடிவு செய்து கொள்வோம். வரும் புத்தாண்டில் இந்த உறுதிப்பாட்டை மேற்கொள்வோம்.
உள்ளூர் பொருட்களையே பயன்படுத்துவோம்
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட் முரளிப்ரஸாத் நம் நாட்டு மக்களின் உழைப்பும், வியர்வையும் கலந்திருக்கும் பொருட்களையே வாங்கப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறார். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்' என்பது வீடுகள்தோறும் எதிரொலிக்க தொடங்கி விட்டது. நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு தொழில் முனைவோரும் ஸ்டார்ட் அப்களும் முன்வர வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.