வேளாண் சட்டங்களை எதிர்த்து... விவசாயிகள் டிராக்டர் பேரணி... பலத்த போலீஸ் பாதுகாப்பு!
டெல்லி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டிராக்டர் பேரணி தொடங்கினார்கள். விவசாயிகள் செல்லும் வழியெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
26-ம் தேதி டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில் நாளைய டிராக்டர் பேரணி இருக்கும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையிலும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
மாஜி கவுன்சிலர் ஹுசைன், ஜே.என்.யூ. மாணவர் தலைவர் காலித்துக்கு டெல்லி கலவரத்தில் தொடர்பு- நீதிமன்றம்
தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இன்று 43-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையிலும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
மோசமான வானிலை
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதுகுறித்து அறிவிப்பையும் ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர். ஆனால் டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த டிராக்டர் பேரணி இன்று ஒத்தி வைக்கப்படுவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இன்று தொடங்கியது
அதன்படி இன்று காலை திட்டமிட்டபடி விவசாயிகள் தங்களது டிராக்டர் பேரணியை தொடங்கினார்கள். டெல்லியில் தொடர்ந்து வாட்டி வரும் கடுங்குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் பேரணி துவக்கினார்கள். ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று பிரமாண்ட பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
குடியரசு தின ஒத்திகை
அதன் ஒத்திகையாக இன்றைய டிராக்டர் பேரணி துவங்கப்பட்டது. இந்த பேரணி சிங்கு, திக்ரி, ஷாஜகான்பூர், பல்வால் மற்றும் காசிப்பூர் வழியாக செல்லும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ''தஸ்னா, அலிகார் சாலை வரை சென்று பின்னர் காசிப்பூர் திரும்பும். ஜனவரி 26-ம் தேதி இதேபோன்ற பெரிய பேரணியை நடத்த உள்ளோம். அதற்கான ஒத்திகைதான் இது'' என்று காசிப்பூர் எல்லையில் பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் கூறினார்.
பலத்த பாதுகாப்பு
விவசாயிகளின் டிராக்டர் பேரணி காரணமாக அவர்கள் செல்லும் வழியெங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. குண்ட்லி-மானேசர்-பல்வால் சுங்கசாவடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் பால்வால் வரை டிராக்டர் பேரணியை மேற்கொள்ள இருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் நொய்டா வரை மட்டுமே சென்று காசிப்பூர் திரும்புவர் என்று உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தின் ஏடிஎம் (நகரம்) ஷைலேந்திர குமார் சிங் கூறினார்.