டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் - மத்திய அரசின் அழைப்புக்கு நிராகரிப்பு
டெல்லியில் விவசாயிகள் தாங்கள் போராட்டம் நடத்தும் இடங்களில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்சிங்கு எல்லையில், 11 பேர் கொண்ட குழு, தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளது.
டெல்லி: வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் தாங்கள் போராட்டம் நடத்தும் இடங்களில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்துள்ளனர். சிங்கு எல்லையில், 11 பேர் கொண்ட குழு, தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கியது. நல்ல முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது வேளாண் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல நாட்கள் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. ரயில் மறியலை கைவிட்டு, டெல்லியை நோக்கி 'டெல்லி சலோ' என்ற போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டிராக்டர், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கிளம்பிய விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளிலும் முகாமிட்டுள்ளனர்.
விவசாயிகளின் உற்ற தோழனாக திகழும் டிராக்டர்களை வீடுகளாக்கி அதிலேயே சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்துக்கொண்டு கடந்த 26 நாட்களாக போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகள் பலர் முதியவர்களாக இருப்பதால் குளிர் தாங்காமல் உயிரிழந்து வருகின்றனர். எனினும் அரசுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்பது விவசாயிகளின் முடிவாகும்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடந்து வரும் அனைத்து இடங்களிலும் விவசாயிகள் திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் அறிவித்தனர். அதன்படி ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நாள் என தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருக்கும்.
பரபரப்பு.. பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாயிகள்.. தலைநகரில் தீவிரமாகும் போராட்டம்..!
முதலில், சிங்கு எல்லையில், 11 பேர் கொண்ட குழு, தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கியது. தினசரியும் 11 பேர் கொண்ட குழுவினர் 24 மணிநேரம் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் டெல்லி சிங்கு எல்லையில் ரத்த தான முகாமை தொடங்கியது. போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் பலர், வரிசையில் நின்று தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். ஒரே நாளில் 190 விவசாயிகள் ரத்த தானம் செய்தனர். எனவே, ரத்த தான முகாமை மேலும் சில நாட்கள் நடத்த தொண்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. ஆனால், அந்த சட்டங்களை ரத்து செய்தே தீர வேண்டும் என்று விவசாய அமைப்புகள் வலியுறுத்துவதால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து, 40 விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. ஆனால், மத்திய அரசின் கடிதத்தை விவசாய சங்கங்கள் நிராகரித்து விட்டன. இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், மத்திய அரசு கடிதத்தில் புதிதாக எதுவும் இல்லை. வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யும் யோசனையை ஏற்கனவே நாங்கள் நிராகரித்து விட்டோம். அவர்களுக்கு எங்கள் கோரிக்கை தெரியாதா? சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்று தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசுடன் பேச விவசாயிகள் எப்போதும் தயாராக உள்ளனர். ஆனால், மத்திய அரசு உறுதியான தீர்வுடன் வர வேண்டும். சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லி வருகிறோம் என்று கூறியுள்ளார் திவாபா கிசான் கமிட்டி பொதுச்செயலாளர் அமர்ஜீத்சிங் ரர்ரா.
அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி இன்று முடிவு செய்வோம். ஆனால், சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளதால் மத்திய அரசும் அமைச்சர்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.