பேச்சுவார்த்தை தோல்வியுற்றால்... மால்கள், பெட்ரோல் பங்குகள் மூடல்... விவசாயிகள் எச்சரிக்கை!
டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.
அவர்களுடன் மத்திய அரசு நடத்திய அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், 4-ம் தேதி நடக்கும் அடுத்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் ஹரியானாவில் உள்ள அனைத்து மால்கள், பெட்ரோல் பம்புகள் மூடப்படும், குண்ட்லி-மானேசர்-பல்வால் நெடுஞ்சாலையில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரித்து உள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வி
ஆனால் இதில் அனைத்திலும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 4-ம் தேதி நடைபெறுகிறது.வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் வாபஸ் இல்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். எனவே 4-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், அடுத்தகட்டமாக போராட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
திருப்தி இல்லை
ஹரியானா-டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர்கள் கூறியதாவது:-
நாங்கள் இதுவரை எழுப்பியுள்ள வேளாண் சட்டம் தொடர்பான பிரச்சினைகளில் 5 சதவீதம் மட்டுமே அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளன. இந்த விவாகரத்தில் கார்ப்பரேட் சார்பு புத்திஜீவிகள் சமரச சூத்திரத்தைப் பற்றி விவாதிக்கின்றனர்.
எதிர்ப்புகள் தொடரும்
இந்த சட்டங்கள் விவசாய சந்தைகள், விவசாய செயல்முறைகள், விவசாயிகள் நிலம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றை நிறுவனங்களுக்குதான் ஒப்படைக்கின்றன, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த ஒரு மாதத்தில் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
டிராக்டர் பேரணி
மத்திய அரசு ஷாஹீன் பாக் போராட்டத்தில் நடந்ததை போல, எங்களை இந்த இடத்தை விட்டு வெளியேற வைக்க முடியாது. 4-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஹரியானாவில் உள்ள அனைத்து மால்கள், பெட்ரோல் பம்புகள் மூடப்படும். ஜனவரி 6 ஆம் தேதி குண்ட்லி-மானேசர்-பல்வால் நெடுஞ்சாலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.