உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த தீவிர பிரசாரம்- விவசாயிகள் ராகேஷ் திகாயத்
டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியை (பா.ஜ.க.) வீழ்த்துவதற்காக தீவிர பிரசாரம் மேற்கொள்வோம் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பஞ்சாப், ஹரியானா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8 மாதங்களாக இந்த போராட்டம் தொடருகிறது.
ஆனால் மத்திய அரசு சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. இருப்பினும் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வைக்காமல் சொந்த மாநிலங்களுக்கு திரும்பப் போவதில்லை என்பதில் விவசாயிகள் திட்டவட்டமாக உள்ளனர்.
மத்திய பாஜக அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஜூலை 9, 10-ல் டிராக்டர்கள் பேரணி- ராகேஷ் திகாயத்
மே.வ. தேர்தல்
இதனிடையே டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்தோம். அதனால் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டது.
உ.பி, உத்தரகாண்ட் தேர்தல்
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களிலும் இதே வியூகத்தை பின்பற்றுவோம். இந்த 2 மாநிலங்களிலும் பா.ஜ.க.வை எந்த கட்சியால் வீழ்த்த முடியுமோ அந்த கட்சிக்கு அல்லது அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். இனி எங்கள் போராட்டம் லக்னோவுக்கு செல்லும் பாதைகளை மறித்து நடைபெறும்.
அடுத்த கட்ட போராட்டம்
டெல்லியில் 8 மாதங்களாகப் போராடி போராடி களைத்துப் போய்விட்டோம் என்று மத்திய பா.ஜ.க. அரசு கருதுகிறது. இதனால் எங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிடுவோம் என நினைக்கிறது மத்திய அரசு. இப்போதுதான் எங்கள் போராட்டம் விரிவடைந்துள்ளது. இருப்பினும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து எந்த திட்டமும் இல்லை.
பாஜகவுடன் யுத்தம்
நாங்கள் பா.ஜ.க.வுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்திருக்கிறோம். இந்த தேசத்தின் விவசாயிகளின் ஒரு வாக்கு கூட பா.ஜ.கவு.க்கு விழக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தல்களுக்கான வியூகம் தொடர்பாக செப்டம்பர் 5-ந் தேதி உ.பி.யின் முசாஃபர்நகரில் முதலாவது மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு ராகேஷ் திகாயத் தெரிவித்தார்.