இந்த முறை 40 லட்சம் டிராக்டர்கள்... நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்... எச்சரிக்கும் ராகேஷ் டிக்கைட்
டெல்லி: மத்திய அரசு உடனடியாக விவசாய சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு சுமார் மூன்று மாதங்களாக மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவை திரட்டும் வகையில் நாடு முழுவதும் கிசான் மகாபஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியையும் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இதில் விவசாய தலைவர்கள் கலந்து கொண்டு விவசாய சட்டங்கள் குறித்துப் பேசிவருகின்றனர்.
நாடாளுமன்ற முற்றுகை
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சிகார் என்ற பகுதியில் விவசாயிகளின் கிசான் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட், "இந்த முறை நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும். இது குறித்து அறிவித்துவிட்டு தலைநகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இந்த முறை நான்கு லட்சம் டிராக்டர்களுக்கு பதிலாக 40 லட்சம் டிராக்டர்கள் இருக்கும்" என்றார்.
தலைநகரிலேயே விவசாயம்
அனைத்து விவசாயச் சங்க தலைவர்களும் இணைந்து நாடாளுமன்ற முற்றுகை போராட்ட தேதியை அறிவிப்பார்கள் என்று தெரிவித்த அவர், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்தியா கேட் அருகே உள்ள பூங்காக்களை உழுது, அங்கேயே தங்கள் பயிர்களை விளைவிப்பார்கள் என்றும் அவர் பேசினார்.
டிராக்டர் பேரணி வன்முறை
மேலும், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின டிராக்டர் பேரணியின்போது விவசாயிகளை இழிவுபடுத்த ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "நாட்டின் இருக்கும் விவசாயிகள் நமது மூவர்ணக் கொடியை விரும்புகிறார்கள், ஆனால், இந்த நாட்டின் தலைவர்கள் தான் அதை விரும்புவதில்லை" என்று அவர் கூறினார்.
சேமிப்பு கிடங்குகள்
தொடர்ந்து பேசிய அவர், "இந்த மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், நாட்டில் பெரிய நிறுவனங்களுக்குச் சொந்தமான சேமிப்பு கிடங்குகளை விவசாயிகள் தாக்க வேண்டியிருக்கும். இந்தப் போராட்டத்திற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்