நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்- 40 லட்சம் டிராக்டர்கள் அணிவகுக்கும்:ராகேஷ் திகாயத் எச்சரிக்கை
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் 4 லட்சம் அல்ல 40 லட்சம் டிராக்டர்கள் அணிவகுக்கும் என்றும் டெல்லியில் போராடும் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் 77வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களில் 100க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்து வருகின்றன. ஜனவரி 26-ல் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் விரும்பத்தாகத நிகழ்வுகள் நிகழ்ந்தன. இதனால் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும் டெல்லியின் சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் பொதுமக்கள், விவசாயிகளை கட்டுப்படுத்தி வைக்கக் கூடிய மகாபஞ்சாயத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் டெல்லியில் போராடும் ராகேஷ் திகாயத் பங்கேற்று ஆவேசமாக பேசி வருகிறார்.
இந்த மகா பஞ்சாயத்து கூட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ராகேஷ் திகாயத், எங்களது டெல்லி போராட்டம் அக்டோபர் 2-ந் தேதி வரை தொடரும். அதற்கு பின்னர் நாடு தழுவிய அளவில் இந்த போராட்டம் நடைபெறும். இப்போது 4 லட்சம் டிராக்டர்களை கொண்டு பேரணி நடத்தினோம். இனி 40 லட்சம் டிராக்டர்களை வைத்து போராட்டம் நடத்துவோம்.
மகாபஞ்சாயத்து கூட்டங்கள் ஒன்றும் தடை செய்யப்பட்டவை அல்ல. அவற்றை நடத்துவதற்கு உரிமை உண்டு. அதில் நான் பங்கேற்கவும் உரிமை உண்டு. தன் வாழ்நாளில் ஒரு போராட்டத்தில் கூட பிரதமர் மோடி பங்கேற்றது இல்லை. அவருக்கு விவசாயிகளை பற்றி என்னதான் தெரியும்? என்றார்.