பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை, வீட்டுக் காவலிலும் இல்லை.. அமித் ஷா சொன்ன புது விளக்கம்
டெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வரும், லோக் சபா உறுப்பினருமான, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை என்று லோக்சபாவில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு இன்று வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. மேலும், அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான சட்ட மசோதாவை ராஜ்யசபாவில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் லோக்சபாவில் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த விவாதத்தில் பங்கேற்பதற்கு லோக்சபாவிற்கு பரூக் அப்துல்லா வருகை தரவில்லை.
காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் முன்னாள் முதல்வர்கள், மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே பரூக் அப்துல்லாவும் அதே போன்று கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
காஷ்மீர் விவகாரம்... சீனா, முஸ்லிம் நாடுகள் கனத்த மவுனம்... தன்னந்தனியே போராடும் பாக்.
இது தொடர்பாக திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்பினார். அப்போது அவையில் இருந்தபோதிலும், அமித் ஷா இது தொடர்பாக என்ற ஒரு விளக்கத்தையும் அளிக்காமல் இருந்தார்.
ஆனால், இன்று பிற்பகலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே உரையாற்றுகையில், "லோக்சபாவில் எனது இருக்கை எண் 462, பரூக் அப்துல்லா 461 இருக்கையில் அமர்வார். அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் இந்த பிரச்சினையில் விவாதிக்க அவர் இன்று அவைக்கு வரவில்லை. அவர் இல்லாமல் இந்த விவாதம் நிறைவடையாது என்பதுதான் எனது கருத்து" என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை. அவர் வீட்டுக் காவலிலும் வைக்கப்படவில்லை. தனது சொந்த விருப்பத்தின் பேரில், தனது வீட்டில் அவர் இருக்கிறார்." என்று பதிலளித்தார். இதன் மூலம் பரூக் அப்துல்லா எங்கே..? என்ற கேள்விக்கு ஒரு வழியாக பதில் கிடைத்துள்ளது.