டெல்லி வன்முறையில் இரு பிள்ளைகளை பறிக் கொடுத்த தந்தை.. சடலங்களுடன் வீடு திரும்பிய சோகம்
டெல்லி: டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட இரு மகன்களின் உடல்கள் 3 நாட்கள் கழித்து ஒப்படைக்கப்பட்ட அடுத்து துக்கம் தாளாமல் அவற்றை சோகத்துடன் வீட்டுக்கு கொண்டு செல்லப்படும் காட்சி உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாப்ராபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஜாபர்பாத், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடந்தது. இந்த கலவரத்தால் 43 பேர் பலியாகிவிட்டனர்.
100-க்கும் மேற்பட்டோர் இந்த கலவரத்தால் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் தற்போதுதான் அமைதி மெல்ல மெல்ல திரும்புகிறது.
மருத்துவமனை
பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனையில் சடலங்கள் குவிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக உறவினர்கள் சோகத்துடன் பிணவறை வாயிலில் காத்து கிடக்கின்றனர். குருதேஜ் பகதூர் மருத்துவமனை (ஜிடிபி) மருத்துவமனையில் 38 பேரின் சடலங்களும், லோக்நாயக் மருத்துவமனையில் 3 பேரின் சடலங்களும், ஜெக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் ஒருவரது சடலமும் வைக்கப்பட்டுள்ளது.
15 சடலங்கள்
ஜிடிபி மருத்துவமனையில் பிணவறையில் உள்ள 15 சடலங்களில் 9 பேரின் அடையாளங்கள் தெரியவந்தது. ஏராளமான தங்களை இழந்த சொந்தங்களின் சடலத்தை தேடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி வன்முறையில் இறந்த சகோதரர்களின் உடல்கள் 4 நாட்கள் கழித்து நேற்று மாலை அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உருக்கம்
குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் வைக்கப்பட்ட சகோதரர்கள் அமிர்கான் (30), ஹாசிம் அலி (19) ஆகியோரின் உடல்கள் அவரது தந்தை பாபுகானிடம் ஒப்படைக்கப்பட்டது. வடகிழக்கு டெல்லியின் முஸ்தபாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு மகன்களின் உடல்களை கொண்டு வந்தார் பாபு கான். கையில் மகன்கள் இறந்துவிட்டதாக மருத்துவமனை வழங்கிய சான்றிதழுடன் துக்கத்தை அடைக்க வாகனத்தில் பயணித்த காட்சிகள் உருக்கமாக இருந்தது.
தந்தையின் முகத்தை காண...
இதில் என்ன கொடுமை என்றால் அமீருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அவருக்கு 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தன் தந்தையின் முகத்தை காண்பதற்காக வீட்டில் காத்து கிடந்த கொடூரமான சூழலும் நடந்தது. இதையடுத்து இரு சகோதரர்களின் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.