இந்திய ராணுவத்திற்கு தரம் குறைந்த ஆயுதங்கள் சப்ளை? விபத்துகள் அதிகரிப்பு என பரபரப்பு புகார்
டெல்லி: தரமற்ற வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சப்ளை காரணமாக, அதிகப்படியாக விபத்துகள் ஏற்படுவதாக இந்திய ராணுவம் சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு, மத்திய அரசின், ஆர்ட்னன்ஸ் பேக்டரி போர்டு அமைப்புதான் ஆயுதங்களை சப்ளை செய்கிறது. 41 ஆயுத, தொழிற்சாலைகள் இந்த அமைப்பின்கீழ் இயங்குகிறது.
ஆனால், தரமற்ற ஆயுதங்கள், தளவாடங்கள் சப்ளையால் சமீபகாலமாக, விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சக கவனத்திற்கு ராணுவம் கொண்டு சென்றுள்ளது.
கதை முடிந்துவிட்டது.. பாஜகவை ஆர்எஸ்எஸ்ஸே கைவிட்டுவிட்டது.. நிலவரத்தை போட்டுடைத்த மாயாவதி!
பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை
15 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை, பாதுகாப்புத்துறையிடம் வழங்கியுள்ளது ராணுவம். பெரும்பாலான விபத்துக்கள் 105 எம்எண் இந்திய துப்பாக்கிகள், 105 எம்எம் ஃலைட் ஃபீல்ட் துப்பாக்கிகள், 130 எம்எம் எம்ஏ1 மீடியம் துப்பாக்கிகள், 40 எம்எம் எல்-70 ஏர் டிபென்ஸ் துப்பாக்கிகள், டி-72 மற்றும் டி-90 வகை துப்பாக்கி குண்டுகளால் அதிகப்படியாக விபத்துகள் நடப்பதாக அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சில நேரங்களில் 155 எம்எம் போபர்ஸ் துப்பாக்கிகளிலும் விபத்துகள் நடந்துள்ளதாக அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பயிற்சி நிறுத்தம்
பிப்ரவரி மாதம் நடைபெற்ற விபத்துகளுக்கு பிறகு, 40 எம்எம் துப்பாக்கிகளை கொண்டும், எல்-70 துப்பாக்கிகளை கொண்டும் பயிற்சி பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே எல்-70 தோட்டாக்கள் வீணாகியுள்ளது. மோசமான தரம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று தெரிகிறது.
தரம் சோதனைகள்
இதுபற்றி ஆர்ட்னன்ஸ் பேக்டரி போர்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிகப்படியான தரச் சோதனைகளுக்கு பிறகுதான், வெடி பொருட்களை ராணுவத்திற்கு அளிக்கிறோம். மொத்தமாக வெடி பொருட்களை சேமித்து வைத்தல், தவறாக கையாளுதல் போன்றவற்றால் வேண்டுமானால் விபத்துக்கள் நடந்திருக்கலாமே தவிர, தரத்தில் சமரசம் செய்வதில்லை என்று தெரிவித்தார்.
விசாரணை
ஆர்ட்னன்ஸ் பேக்டரி போர்டு சார்பில் இதுவரை 7 கமிட்டிகள் அமைக்கப்பட்டு, ராணுவ தளவாட தரம் பற்றி ஆய்வு நடந்துள்ளது. ஆனால், ஆயுத கிடங்கில் உள்ள ஆயுதங்களின் நிலை என்ன என்பது பற்றி, விசாரிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.