பொருளாதாரத்தை உயர்த்த ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: அந்நிய முதலீடுகளை ஈர்க்க ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பல்வேறு பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு அவசியமான ஒன்று. தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் உதவியுடன், அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க ஆண்டுதோறும் நம் நாட்டில் இனி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார்,
2018 மற்றும் 2019க்கு இடையில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 6% அதிகரித்து ரூ. 4.4 லட்சம் கோடியாக உள்ளது
துறைமுகம், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வெளிநாடு முதலீடு அவசியம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். எனவே முன்னணி தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றார்
காப்பீட்டு துறை, ஊடகம் மற்றும் விமான போக்குவரத்து துறை உள்ளிட்டவற்றில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதில் ஊடகதுறையில் அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் எனப்படும் ஏவிஜிசி துறை சார்ந்த காப்பீடு ஆகிவற்றில் அந்நிய நேரடி முதலீட்டின் விதிமுறைகளை தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஊடகத்துறையை பொருத்த வரை நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்டவைகளுக்கு 26% நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கப்படும். அரசின் அனுமதியுடன் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களை பிரசுரித்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
அதே போல வெளிநாட்டு ஏடுகளின் இந்திய பதிப்புகளும் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி துறையில் வணிக ரீதியாக செயல்பட்டு வருகிறது இஸ்ரோ. எனினும் விண்வெளித்துறையில் அந்நிய முதலீடுகளை ஈர்க்க, இஸ்ரோவின் வணிக நிறுவனமாக என்.எஸ்.ஐ.எல் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படும் என்றார்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியாக, மேற்கண்ட துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டு விதிகளை மேலும் தளர்த்த அரசு தயாராகி வருவதாக குறிப்பிட்டார். மேற்கண்ட அறிவிப்புகள் சர்வதேச முதலீட்டாளர்களை நம் நாட்டின் பக்கம் ஈர்க்கும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார்.