உரங்களை பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு
டெல்லி: உர உற்பத்தி நிறுவனங்கள் திடீரென 60 சதவிகிதம் விலையை உயர்த்தியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உரங்களை பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அறிவித்துள்ளார்.
பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் முக்கிய கூட்டு உரங்களின் விலையை, உர உற்பத்தி நிறுவனங்கள் திடீரென 60 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தின 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை 1200 ரூபாயிலிருந்து 1900 ரூபாயாக உயர்ந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே எதிர்க்கட்சிகளும் அரசு மீது விமர்சித்து வருகின்றன. ஏற்கனவே டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் புதிய பிரச்சனையாக இது உருவெடுத்தது.
இதையடுத்து உடனடியாக தலையிட்ட மத்திய அரசு உரங்களின் விலை உயர்வை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வெளியிட்டுள்ள வீடியோவில், உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
பேச்சுவார்த்தையில் தற்போதைக்கு உரங்களின் விலை உயர்வை நிறுத்தி வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பழைய விலைக்கே உரங்களை வாங்கி கொள்ளலாம் என்றார்.